அப்பா பைத்தியம் சாமியும், அழுக்கு சாமியாரும் நாட்டைக் காப்பார்களா?

viduthalai
2 Min Read

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தே.ஜ. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதனால் வேட்பாளர் தேர்வு விஷயத்தில் தே.ஜ. கூட்டணி தலைவரான ரங்கசாமியின் முடிவுக்கு பா.ஜ. காத்திருக்கிறது. மேனாள் என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப் படலாம் என்ற தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காலியாக உள்ள அமைச்சர் பதவியை நிரப்புவதற்கும் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். இது போன்று சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மீக குருவான சேலம் அப்பா பைத்தியம்சாமி மற்றும் பொள்ளாச்சி அழுக்கு சாமியார் ஆகியோரை தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி தே.ஜ. கூட்டணி வேட்பாளர் தேர்வு, புதிய அமைச்சர் நியமனம் ஆகியவற்றுக்கு சேலம் அப்பா பைத்தியம்சாமி கோவிலில் வழிபாடு நடத்தி அருள் வாக்கு கேட்க சென்றுள்ளார் (11-2-2024) தொடர்ந்து வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்கு சாமியார் கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டார். இதனால் விரைவில் வேட்பாளர் மற்றும் புதிய அமைச்சர் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தேஜ கூட்டணி வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயத்தையும் – டிஸ்மிஸ் செய்யப்பட்ட சந்திரபிரியங்காவுக்குப் பதிலாக காரைக்கால் எம்.எல்.ஏ. திருமுருகனை அமைச்சராகவும் நியமித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஒரு முதலமைச்சராக இருப்பவர் ஆட்சி நடத்தவும், தேர்தல் குறித்தும் முடிவு செய்யும் திறனற்றவராக இருக்கிறார். அழுக்கு சாமியாரையும், சேலம் அப்பா பைத்தியம் சாமியையும் கட்டிப் பிடித்து ஆசீர்வாதம் வாங்குகிறார் என்றால், இதை விடக் கேடு கெட்ட ஒரு முதலமைச்சரை எங்கே போய்த் தேடுவது?

அதுவும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவரே இந்த நிலையில் இருந்தால் வளர்ச்சித் திட்டங்களும், மக்களைப்பற்றிய சிந்தனைகளும் எங்கே இருந்து குதிக்கும்?
பிரதமர் மோடி பக்திக் கிளுகிளுப்பை காட்டி மக்களை மயக்கினால் மாநில முதலமைச்சர்கள், இதில்தானே போட்டி போடுவார்கள்.

இவ்வளவுப் பக்திப் பைத்தியம் பிடித்து அலையும் புதுச்சேரி முதலமைச்சர் ஒவ்வொரு நொடியும் பி.ஜே.பி.யின் அதட்டலுக்கும், உருட்ட லுக்கும் அஞ்சித் தானே அடி எடுத்து வைக்கிறார்.
மக்களுக்கு விஞ்ஞான மனப்பான்மையை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. குடி மக்களுக்கு விஞ்ஞான மனப்பான்மையை ஊட்டுவது ஒருபுறம் இருக்கட்டும் முதலில் இது போன்ற முதலமைச்சர்களை என்ன செய்வது?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *