வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கொடுத்தது ரூ.8.04 லட்சம் கோடி ஒன்றிய அரசு திருப்பி தந்தது ரூ.1.58 லட்சம் கோடி: புள்ளி விவரத்தில் அதிர்ச்சித் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, பிப். 12- அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடந்த 2018-2019 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி கிடைத்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வரிப்பகிர்வாக ரூ.1,58,145.62 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து மாநிலங்களின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், அனைத்துத் திட்டங்களுக்கும் நிதித் தேவைக்கு ஒன்றிய அரசிடம் கையேந்த வேண்டிய நிலை மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு விட்டது. ஜிஎஸ்டியால் வரி வருவாய் மொத்தமாக முடங்கி விட்டபோதிலும், ஒன்றிய அரசு தர வேண்டிய வரிப்பகிர்வு போதுமானதாக இல்லை என மாநிலங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி தருவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக தொடர்ந்து விமர் சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு கடந்த 2018-2019 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரை மாநிலங்கள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வசூல், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூல் மற்றும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வரிப்பகிர்வு விவரங்கள் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டன.

இதன்படி மேற்கண்ட 2018-2019 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982.61 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி என மொத்தம் ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இதில், ஒன்றிய அரசு இதே காலக்கட்டத்தில் ரூ.1,58,145.62 கோடியை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கண்ட காலக்கட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரிப்பகிர்வு வழங் கப்பட்டுள்ளது.

உதாரணமாக, உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு மொத்த வரிப்பகிர்வாக ரூ.1,69,745.3 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இந்த மாநிலம் மூலம் ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் ரூ.3,48,159.87 கோடி கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், மேற்கண்ட 5 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் இருந்து நேரடி வரி வசூல் ரூ.37,983.05 கோடி மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *