குடிசைவாழ் மாணவிகளுக்கும் தன்னம்பிக்கை தரும் ‘புதுமைப் பெண்’ திட்டம்!

viduthalai
2 Min Read

தமிழ்நாடு முதலமைச்சரின் ‘புதுமைப் பெண்’ திட்டம் குடிசைக்குள் ஊடுருவிப் பாய்ந்து பயனளித் துள்ளது.
இந்தக் குடிசை இருக்குமிடம் ரெங்கநாதபுரம், நடுப்படுகை: குடிசையின் முன்புறத்தில் 100 மீட்டர் தொலைவில் திருமலை ராஜன் ஆறு: மறுபுறம் 400 மீட்டர் தொலைவில் நடாறு. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் உள்ள படுகையில்தான் இந்தக் குடிசை உள்ளது.
இந்தப் படுகையில் ஏறத்தாழ 35 குடும்பங்கள் உள்ளன. இந்தப் படுகை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்டது. இந்தக் குடிசையில் இருந்து பட்டீஸ்வரம் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். அப்படிச் சென்று படித்து பன்னிரண்டாம் வகுப்பில் (பிளஸ் டூ) தேர்ச்சி பெற்றவர்தான் பூர்ணா.

பூர்ணா, தன் தந்தை பன்னீர்செல்வம், தாய் காமாட்சி, கல்லூரியில் படிக்கும் தம்பி பால சுப்பிரமணியம் ஆகியோருடன் இந்தக் குடிசையில் தான் வாழ்கின்றார். பெற்றோர் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.
பள்ளிப்படிப்பை முடித்து ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி கணிதப் பாடத்தைத் தேர்வு செய்து படித்து வருகிறார். பட்டீஸ் வரத்திலிருந்து பேருந்தில் கல்லூரிக்குச் செல்கிறார்.
இந்தப் பூர்ணாவுக்கு மாதம் ரூ.1,000/- (ரூபாய் ஆயிரம்) வங்கி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கருணை பொங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் சென்று சேர்கிறது.

இந்தப் பணம் கிடைத்துள்ளதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடையும் பூர்ணா, இந்தப் பணம் எனக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. பேருந்து போக்கு வரத்துக்கு, நோட்டுப் புத்தகங்கள் வாங்க பயன்படுகிறது. என் பெற்றோரின் குடும்பச் செலவுக்கும் பயன்படுகிறது.
படிக்கும்போதே சம்பாதிப்பது போன்ற உணர்வு எனக்கு வருகிறது. அதைவிட மனதில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. இந்தத் திட்டத்தை உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் இருப்பிடம் நோக்கி என் கரங்கள் குவிந்து நன்றியை செலுத்துகின்றன.
என்னைப் போன்ற இலட்சக்கணக்கான ஏழை மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கருணைத் தெய்வமாகவே காட்சி அளிக்கிறார்கள். அவரை நீடூழி வாழ்க வாழ்க என வாழ்த்திக் கொண்டிருக்கிறோம் மாணவிகள் நாங்கள் -என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *