இராமன் கோவில் திறப்பு என்பது இராமனுக்காகவோ, பக்திக்காகவோ அல்ல – தேர்தலில் ஓட்டு வேட்டைக்காக! இராமன் முகமூடி போட்டு, இராமனைக் காட்டி ஓட்டு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள் –
தமிழ்நாட்டில் அது ஏற்கெனவே தோல்வியை சந்தித்த விஷயம்
இன்று இந்தியா முழுவதும் வரப் போகிறது!
கோவை, ஜன.19 இராமன் கோவில் திறப்பு என்பது இராமனுக்காகவோ, பக்திக்காகவோ அல்ல – தேர்தலில் ஓட்டு வேட்டைக்காக! இராமன் முகமூடி போட்டு, இராமனைக் காட்டி ஓட்டு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அது ஏற்கெனவே தோல்வியை சந்தித்த விஷயம். 1971 ஆம் ஆண்டு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, ‘‘பெரியார், இராமனை அவமதித்துவிட்டார்” என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். அதற்குப் பிறகுதான் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதே நிலைதான், இன்று இந்தியா முழுவதும் வரப் போகிறது. அயோத்தி இராமன் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி நல்ல முடிவெடுத்திருக்கிறது – அது வரவேற்கவேண்டிய விஷயமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு’’ பரப்புரைக் கூட்டம்
கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த 11.1.2024 அன்று மாலை கோவை புலியகுளம் ரெட் பீல்டு சாலையில் ‘‘வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு’’ பரப்புரை சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
உச்சநீதிமன்றத்தின் கண்டனம்!
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் சொல்கிறது – குற்றவாளிகளை விடுவிக்க உங்களுக்கு அதிகாரமே கிடையாதே – எப்படி விடுவித்தீர்கள்? வழக்கு விசா ரணையை நடத்திய மும்பை நீதிமன்றம் குற்றவாளி களுக்குத் தண்டனை விதித்தது. ஆனால், குஜராத் அரசு குற்றவாளிகளை விடுவித்தது எப்படி? என்று கேட்டு, அந்தக் குற்றவாளிகளை சிறையில் அடைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
நீதிபதிகள் நியமனத்தில், உங்களுக்கு (ஒன்றிய அரசுக்கு) வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே சொல்கிறார்.
இதுவரையில், எந்த ஆட்சியிலாவது உச்சநீதிமன்றம் இப்படி வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியது உண்டா?
எனவே, நீதித்துறை – நிர்வாகத் துறை எப்படி நடக்கிறது என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
18 வயது நிரம்பிய இளைஞர்கள், அவரவர் ஜாதித் தொழிலை செய்யவேண்டும் என்று சொல்லி, மூன்று லட்சம் ரூபாயை சும்மா கொடுக்கவில்லை ஒன்றிய அரசு. கடனாகத்தான் கொடுக்கிறது.
‘‘விஸ்வகர்மா யோஜனா’’ திட்டம் என்பது
அது ஆர்.எஸ்.எஸ். கொள்கைத் திட்டமே!
கல்லூரிக்கோ, பல்கலைக் கழகத்திற்கோ சென்று அந்த இளைஞர்கள் படிக்கக்கூடாது என்பதற்காகத்தான் ‘‘விஸ்வகர்மா யோஜனா” திட்டம் – அது ஆர்.எஸ்.எஸ். கொள்கை.
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர், திலகர் காலத்திலிருந்து பெண்கள் படிக்கக் கூடாது; ஒடுக்கப்பட்டவர்கள் படிக்கக் கூடாது என்று தடை போட்டு வருபவர்கள்.
சட்டமன்றத்தில் திலகர் பேசுகிறார், ‘‘செக்கு ஆட்டு கிறவர்களும், முகச் சவரம் செய்கிறவர்களும் சட்ட மன்றத்திற்குப் போகலாமா?” என்று. அவ்வாறு பேசியதை, அம் பேத்கர் அவர்கள், அதனை தன்னுடைய புத்தகத்தில் எடுத்துக்காட்டி இருக்கிறார்.
மாநில அரசுகளுடைய கழுத்தை நெரிக்கிறார்கள்- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் செயல்பட வேண்டாமா?
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.
ஏன் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் சொல்லிய பிறகும், அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார் ஆளுநர்.
இவ்வளவு சங்கடத்தோடு ஒரு முதலமைச்சர் ஆட் சியை நடத்துகிறார் என்றால், இந்த முதலமைச்சரை தவிர, இவ்வளவு சாமர்த்தியமாக, சகித்துக்கொண்டு, நிதி நெருக்கடிகளையும் சமாளித்துக்கொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற முதலமைச்சர் வேறு யாராவது உண்டா?
47 ஆண்டுகளாக இல்லாத மழை, தமிழ்நாட்டில் பெய்திருக்கிறது – அதை ‘தேசியப் பேரிடராக’ அறிவிக்க வேண்டும் என்றால், அதை மறுத்திருக்கிறது ஒன்றிய அரசு.
ஒன்றியத்தில் இருக்கின்ற ஆட்சிதான் பேரிடர் என்பதில் சந்தேகமேயில்லை: அமைச்சர் உதயநிதி
நம்முடைய அமைச்சர் உதயநிதி சொன்னார், ‘‘இந்த தேசியப் பேரிடரைவிட, இப்பொழுது ஒன்றியத்தில் இருக்கின்ற ஆட்சிதான் பேரிடர் என்பதில் சந்தேகமே யில்லை” என்றார்.
அந்தப் பேரிடர் மீண்டும் நமக்கு ஏற்படவேண்டுமா?
விமான நிலையத்தைத் திறப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு, திருச்சிக்கு வருகிறார். அப்படி வருகின்ற பொழுது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்குச் சென்று, அந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாரா?
முதலமைச்சர் கொஞ்சம் ஜாடை காட்டியிருந்தால், என்னவாகியிருக்கும்?
நம்முடைய முதலமைச்சர் டில்லிக்கே சென்று, நேரில் சந்தித்து பிரதமர் மோடியிடம் நிவாரண நிதியைக் கொடுங்கள் என்று கேட்டார். இங்கே விமான நிலை யத்தைத் திறக்க வந்தபோதும் கேட்டார்.
அந்த நிகழ்ச்சியில், பிரதமரை வைத்துக் கொண்டு முதலமைச்சர் இப்படி பேசலாமா? என்று வீரம் பேசிய தோழர்கள், ‘‘அய்யோ, இப்படி பேச லாமா, பிரதமர் முன்? என்று கேட்டவர்களுடைய வாய், இப்பொழுது எங்கே போயிற்று?
கண்டித்து ஒரு வார்த்தை பேசியிருப்பீர்களா?
எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம் இந்த இயக்கம். கூச்சல் போடுங்கள் என்று முதலமைச்சர் கொஞ்சம் ஜாடை காட்டியிருந்தால், என்னவாகி யிருக்கும்?
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு பிரதமர் பார்க்கவேண்டாமா?
ஒன்றியத்தில் நிதியமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரிடம், வெங்காய விலைப்பற்றி கேட்டால், அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?
‘‘நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை!” என்கிறார்.
இப்பொழுதே அவர்கள் இந்த அதிகார ஆணவத்தில் இருந்தால், இன்னொருமுறை ஒன்றியத்தில் ஆட்சிக்கு அவர்கள் வந்துவிட்டால், என்னாகும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இதையெல்லாம் மக்கள் விளங்கிக் கொண்டார்கள், இப்பொழுது!
64 சதவிகித மக்கள்
பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லை!
வடநாட்டு மக்களும் பா.ஜ.க.வைப்பற்றி விளங்கிக் கொண்டார்கள். ஒரு சில மாநிலங்களில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற ஒரு ‘மாயையை’ உருவாக்குவார்கள்.
அவர்கள் இரண்டு முறையும் பெற்ற வாக்கு சதவிகிதம் அதிகபட்சமாக 36 சதவிகிதம்தான். மீதமுள்ள 64 சதவிகித மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லை.
எப்படி அவர்கள் 36 சதவிகித வாக்குகளைப் பெற் றார்கள் என்றால், அன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்சி யினர் பிரிந்து, பிரிந்து இருந்தார்கள்.
‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே
பீதியோடு இருக்கிறார்கள்
இப்பொழுது, ‘இந்தியா’ கூட்டணி உருவாகி இருக் கிறது. ‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே பீதியோடு இருக்கிறார்கள்.
அந்த ‘இந்தியா’ கூட்டணிக்கான கரு எங்கே இருந்து போனது தெரியுமா? தமிழ்நாடு – ‘திராவிட மாடல்’ ஆட்சி – நம்முடைய முதலமைச்சரிடமிருந்து!
‘திராவிட பார்மூலா’’தான் காரணம் என்று!
நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார் – நாடாளுமன்றத் தேர் தலில் வெற்றி – சட்டமன்றத் தேர்தலில் வெற்றி – உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி! இவையெல்லாம் எப்படி என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் யோசனை செய்தார்கள் – அப்பொழுதுதான் அவர் களுக்குத் தெரிந்தது ‘திராவிட பார்மூலா”தான் காரணம் என்று.
இங்கே நம்முடைய இராசா உரையாற்றும்பொழுது சொன்னார். அங்கே எதிர்க்கட்சியினர் எல்லோரும் ஒன்று சேருவது என்று முடிவெடுத்து விட்டார்கள். ஆனால், மருந்து இங்கே இருந்துதானே கிடைக்க வேண்டும். ‘கன்’ ரெடியாக இருக்கிறது; மருந்து தேவை அல்லவா!
தமிழ்நாட்டில் எப்படி தொடர்ந்து தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுகிறது என்று அவர்களுக்கு ஆச்சரியம்!
தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. கூட்டணி என்பது, அசைக்க முடியாத கூட்டணி!
வடநாட்டில் எதிர்க்கட்சிகள் – அரசியல் கட்சியினர் கூட்டணி சேர்ந்தால், அது அரசியல் கூட்டணி. தேர்தல் நேரத்தில் கூட்டணி சேருவார்கள் – தொகுதிப் பங்கீடுப் பிரச்சினை ஏற்பட்டால், பிரிந்துவிடுவார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. கூட்டணி என்பது, அசைக்க முடியாத கூட்டணியாகும்.
பள்ளி மாணவர்களுக்கான காலைச் சிற்றுண்டி திட் டத்தைக் கொண்டு வந்த தமிழ்நாடு அரசை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.
பூணூல் பத்திரிகையின் வயிற்றெரிச்சல்!
ஆனால், ஒரு பத்திரிகை மட்டும் என்ன எழுதுகிறது தெரியுமா?
‘‘கழிவறைகள் நிரம்புகின்றன” என்று தலைப் பிட்டு செய்தி வெளியிடுகிறது.
ஏனென்றால், பூணூல் போடுகிறவர்களுக்கு, பார்ப்பனர்களுக்கு அவ்வளவு ஆத்திரம் – நம்மு டைய பிள்ளைகள் படித்து வருகிறார்கள் என்பதி னால்.
அப்படிப்பட்ட அந்தப் பத்திரிகை என்ன எழுதுகிறது என்றால், ‘‘தி.மு.க. கூட்டணியிலிருந்து இவர் விலகுவார்; அவர் விலகுவார். அவர் அந்தக் கூட்டணியில் சேர்ந்து விடுவார்” என்றெல்லாம் எழுதுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன் றாகச் சேர்க்கிறார்கள். காலத்தின் கட்டாயம் – கொள்கை ரீதியாகவே இது நடந்து வருகிறது.
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி!
இன்றைக்குக் காலையில்கூட செய்தியாளர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
‘இந்தியா’ கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லையே?” என்று.
பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவேண்டிய அவசி யமே இல்லையே! ஜனநாயகம் என்றால், என்ன?
யார் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அவர்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பதுதான் உண்மையான ஜனநாயகம், சரியான ஜனநாயகம் ஆகும்.
ஆகவே, ‘இந்தியா’ கூட்டணி அந்த அடிப்படையில் கவனமாகச் செய்கிறது.
நம்முடைய முதலமைச்சர்தான் ‘இந்தியா’ கூட்ட ணியை உருவாகக்கூடிய யோசனையை சொன்னார்.
இனிமேல் தமிழ்நாடு ஃபார்மூலாதான் நமக்கு – திராவிட ஃபார்மூலாதான் சரியானது என்று உணர்ந்த நிலையில்தான் ‘இந்தியா’ கூட்டணி உருவானது.
இந்தக் கூட்டணியினருக்கிடையே ஒரு சலசலப்பை உருவாக்கவேண்டும் என்று நினைத்தனர் இன எதிரிகள், ஸநாதனத்தைப்பற்றி உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட் டத்தில் பேசினார்; அந்தக் கூட்டத்திற்கு நானும் சென் றிருந்தேன். அவருக்கு முன் உரையாற்றிய நான், அவரைவிட அதிகமாகப் பேசினேன். அந்த மேடையில், திரைத்துறையைச் சார்ந்த முற்போக்குச் சிந்தனையுள்ள அம்மையார் ரோகிணி அமர்ந்திருந்தார்.
அவர் என்னிடம் அப்பொழுது கேட்டார், ‘‘என்ன சார், நீங்கள் என்ன பேசினீர்களோ, அதை ஆமோதிப்பது போல், உதயநிதியும் அதே கருத்தைச் சொல்கிறாரே?” என்று.
கொள்கை ரீதியாக இருவருக்கும் உள்ள ஒற்றுமைதான்!
‘‘ஆமாம் அம்மா, இரண்டு, இரண்டும் நான்கு என்று யார் கூட்டினாலும், உண்மையாகக் கூட்டினால் வரும்” என்று வேடிக்கையாக அவருக்குப் பதில் சொன்னேன். கொள்கை ரீதியாக இருவருக்கும் உள்ள ஒற்றுமைதான் என்றேன்.
என்னை விட்டுவிட்டார்கள்; உதயநிதியைப் பிடித்துக் கொண்டார்கள்.
எதற்காக என்றால், ஸநாதனத்தின் மேல் இருக்கின்ற ஆசையல்ல; ‘இந்தியா’ கூட்டணியை எப்படியாவது பிரித்துவிடவேண்டும் என்பதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கம்.
அதைவிட அவர்களுக்கு முக்கியம், நம்முடைய இராசாதான். இவர் ஏதாவது பேச மாட்டாரா? அவர் பேசாததை எல்லாம் திரித்துப் பேசுவது போன்று சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டார்கள்.
இன்றைக்கு என்னாயிற்று?
இராமன் கோவில் என்பது
தேர்தலில் ஓட்டு வேட்டைக்காக!
அதே ஸநாதனம், அவர்களுக்கு எதிராக வந்திருக்கிறது.
இராமன் கோவில் திறப்பு என்பது இராமனுக் காகவோ, பக்திக்காகவோ அல்ல – தேர்தலில் ஓட்டு வேட்டைக்காக!
இராமன் முகமூடி போட்டு, இராமனைக் காட்டி ஓட்டு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ் நாட்டில் அது ஏற்கெனவே தோல்வியை சந்தித்த விஷயம்.
1971 ஆம் ஆண்டு, கலைஞர் அவர்கள் முதல மைச்சராக இருந்தபொழுது, ‘‘பெரியார், இராமனை அவ மதித்துவிட்டார்” என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள்.
அதற்குப் பிறகுதான் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதே நிலைதான், இன்று இந்தியா முழுவதும் வரப் போகிறது.
அயோத்தி இராமன் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி நல்ல முடிவெடுத்திருக்கிறது – அது வரவேற்கவேண்டிய விஷயமாகும்.
மதச்சார்பின்மை, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாக இருப்பதை இங்கே இராசா அவர்கள் எடுத்துச் சொன்னார்.
அரசமைப்புச் சட்டத்தின் அய்ந்து அம்சங்கள்
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அய்ந்து அம்சங்கள்:
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC
இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜன நாயக, குடியரசு – இந்த அய்ந்து அம்சங்களும் இருந் தால்தான், அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி!
செக்குலர் என்றால் என்ன?
அவரவர் நம்பிக்கையை அவரவர் வீட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்!
பக்தி என்பது அவரவருடைய சொந்த நம்பிக்கை. அது அரசாங்கத்தில் வரக்கூடாது. ஏனென்றால், அர சாங்கத்தில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக் கிறார்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள், கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவரவர் நம்பிக்கையை அவரவர் வீட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
ஆனால், அதை அரசுப் பணத்தில் செய்யக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம்.
காந்தியாரை சுட்டுக் கொன்றதைப்பற்றி இங்கே சொன்னார் அல்லவா, நம்முடைய இராசா அவர்கள். அதுகுறித்து தந்தை பெரியார் அவர்கள் எழுதி யிருக்கிறார், அவருடைய டைரியில்.
அரசாங்கமும் – மதமும் ஒன்றாகக் கூடாது என்றார் காந்தியார்!
வகுப்புரிமை, சமூகநீதி போன்ற விஷயங்களைச் சொன்ன காந்தியார், அரசாங்கமும் – மதமும் ஒன்றாகக் கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட் டும் மதச்சார் பின்மையை விடக்கூடாது என்று சுட்டுக் கொல்லப் படுவதற்கு முன்பு சொன்னார்.
அதனால்தான், கோட்சே உருவானார்; ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் அவர்.
ஆகவே, இன்றைக்கு சமதர்மத்திற்கு விடை கொடுத்தாகிவிட்டது; ஏனென்றால், அதானிகள் தான் இந்த நாட்டை ஆளுகிறார்கள்.
நாட்டிலுள்ள விமான நிலையங்களே
ஒன்றிய அரசுக்குச் சொந்தமில்லை!
உலகத்தில் உள்ள எந்த நாட்டை எடுத்துக்கொண் டாலும், அந்த அரசாங்கத்திற்கென்று ஒரு விமானம் உண்டு. ஆனால், நம்முடைய நாட்டிலுள்ள ஒன்றிய அரசாங்கத்திற்கு விமானம் கிடையாது. விமான நிலை யங்களே அரசுக்குச் சொந்தமில்லாமல், தனியாருக்கு வாடகைக்கு விட்டுவிட்டார்கள்.
இன்னுங்கேட்டால், இந்தியாவையே வாடகைக்கு விடக்கூடிய அளவிற்குரிய சூழ்நிலை இன்றைக்கு வந்தாகிவிட்டது.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இராமனைக் காட்டி தேர்தலில் வெற்றி பெறலாம் என்று அவர்கள் கணக்குப் போட்டுள்ளார்கள்.
எங்களைப் பார்த்து ஹிந்து விரோதி என்று சொல்லும் அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், இங்கே செய்தியாளர்கள் எல்லாம் இருக்கிறீர்கள்.
இன்றைக்கு மாலையில் வந்த செய்தி என்ன தெரியுமா?
கட்டி முடிக்கப்படாத கோவிலைத் திறந்தால், ஹிந்து மதத்திற்கு ஆபத்து!
நான்கு மட சங்கராச்சாரிகளும், அயோத்தி இராமன் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளமாட்டோம். இது முழுக்க முழுக்க ஸநாதனத்திற்கு விரோதம். கட்டி முடிக்கப்படாத கோவிலைத் திறந்தால், ஹிந்து மதத்திற்கு ஆபத்து என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஸநாதனத்தை மீறி நடப்பதாக, எந்தக் காரணத்தைக் காட்டி உதயநிதிமீது குற்றம் சுமத்தினார்களோ – அதே ஸநாதனத்தைக் காட்டி பிரதமர்மீது சங்கராச்சாரியார்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இதுவரையில் எந்தப் பிரதமராவது கோவிலுக்கு அடிக்கல் நாட்டி, திறந்த வரலாறு உண்டா?
அயோத்தி இராமன் கோவில் திறப்பிற்கு செல்ல மாட்டோம் என்று உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், பீகாரில் நிதிஷ்குமார் சொல்கிறார், மேற்கு வங்காளத்தில் மம்தா சொல்கிறார்.
‘இந்தியா’ கூட்டணியின்மீது பழி போடலாம் என்று நினைத்தார்கள்!
இதை வைத்து ‘இந்தியா’ கூட்டணியின்மீது பழி போடலாம் என்று நினைத்தார்கள்; திசை திருப்பலாம் என்று நினைத்தார்கள்.
இளைஞர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?
விலைவாசி ஏன் ஏறியிருக்கிறது?
ஏன் பெண் சமுதாயத்திற்கு வளர்ச்சி இல்லை?
ஏன் சமூகநீதி இல்லை?
என்று ஒன்றிய அரசைப் பார்த்து கேட்டால், ‘‘இராமன், வீரன், சூரன், இராம், இராம்” என்று சொல் கிறார்கள்.
இராமனைக் காட்டி ஓட்டு வாங்கலாம் என்று நினைத் தார்கள் – அந்த எண்ணத்தின் அடிநாதமே இப்பொழுது ஆட ஆரம்பித்துவிட்டது.
சங்கராச்சாரியார் சொல்கிறார், பிரதமர் மோடி இராமன் கோவிலைத் திறப்பது ஸநாதனத்திற்கு விரோதம் என்று.
‘‘ஸநாதனத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் பிரதமர் மோடி’’: சங்கராச்சாரிகள்!
ஸநாதனத்தை எங்களுக்கு விரோதமாக, இந்தியா கூட்டணிக்கு விரோதமாக நீங்கள் பயன்படுத்தினீர்கள். ஆனால், அதே ஸநாதனம் – கத்திக்கு இருமுனை உள் ளதுபோல், சங்கராச்சாரியார் சொல்கிறார், ‘‘ஸநாதனத் திற்கு விரோதமாக செயல்படுகிறார் பிரதமர் மோடி” என்று.
சங்கராச்சாரியாருக்கு முதலில் பதில் சொல்லுங்கள். சங்கராச்சாரியார்தானே மத டிபார்ட்மெண்ட். அவர்கள்தானே மதத் தலைவர்கள்.
அவர் என்ன சொல்லுகிறார், ‘‘இராமன் கோவிலை பிரதமர் திறப்பது தவறு; அதில் நாங்கள் கலந்து கொள்ளவேண்டுமாம்; அது மதத்திற்கு ஆபத்து” என்று.
சங்கராச்சாரியார்கள் நான்கு பேரும் ஹிந்து மத விரோதிகள் என்று சொல்வதற்குத் தைரியம் உண்டா?
இப்படி சொன்ன சங்கராச்சாரியார்கள் நான்கு பேரும் ஹிந்து மத விரோதிகள் என்று சொல் வதற்குத் தைரியம் உண்டா? உங்களுக்கு. அப்படி நீங்கள் சொன்னால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
ஆகவேதான் நண்பர்களே, இன்றைக்கு முழுக்க முழுக்க இராமனும் அவர்களுக்குக் கைகொடுக்க மாட்டான்; மற்றவர்களும் கைகொடுக்கமாட்டார்கள்.
நாங்களும், உதயநிதி அவர்களும் சொன்ன பொழுது, வழக்குப் போடுவோம், தலையை வெட்டுவோம் என்று சொன்னீர்களே, இப்பொழுது யார்மீது வழக்குத் தொடுப்பீர்கள்?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பிரச் சினையில் கலைஞர் கேட்டாரே, ‘‘இராமன் எந்தப் பள்ளியில் படித்தான்?” என்று.
வடக்கில் இருக்கும் ஒரு சாமியார், ‘‘கருணாநிதி யின் தலையை சீவ வேண்டும்” என்றார்.
கலைஞர்தான் பதற்றப்பட்டாரா –
உதயநிதிதான் பதற்றப்பட்டாரா!
அதைக் கேட்ட கலைஞர் பதற்றப்பட்டாரா என்றால், அதுதான் இல்லை.
‘என்னுடைய தலையை என்னாலேயே சீவ முடியவில்லை; நீ எங்கே சீவப் போகிறாய்?” என்று அதற்குப் பதில் சொன்னார்.
உதயநிதி அவருடைய பேரன் அல்லவா! ‘‘அதற் கென்ன, சீப்பு வாங்கித் தருகிறேன், என் தலையை சீவிவிட்டுப் போங்கள்” என்றார்.
இன்றைக்கு சங்கராச்சாரியார்கள் எல்லாம் சேர்ந்து, இராமன் கோவிலைத் திறக்கக் கூடாது என்று சொல் கிறார்களே, அவர்களை நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஆகவே நண்பர்களே! இராமன் என்கிற மயக்க பிஸ்கெட்டைக் கொடுத்து தேர்தலில் ஓட்டு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள்.
அயோத்தி இராமன் கோவில் விவகாரத்தில் கண்டனைக் கணைகளை வீசி வருகிறார்கள்!
வேறு எந்த சரக்கும் இல்லை என்றால், பக்தி என்ற மயக்க பிஸ்கெட்டை எடுத்துக்கொண்டு வருவார்கள். பக்தியைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்; ஆனால், அது தென்னாட்டில் மட்டுமல்ல, வடநாட்டிலும் கைகொடுக்கப் போவதில்லை. ஏனென்றால், வடநாட்டில், பக்தியை அதிகமாக வளர்த்து வைத்திருக்கிறீர்கள். அந்தப் பக்தித் தலைவர்கள்தான், அயோத்தி இராமன் கோவில் விவகாரத்தில் கண்டனைக் கணைகளை வீசி வருகிறார்கள்.
இன்னொரு குண்டையும் அவர்கள் தூக்கிப் போட்டிருக்கிறார்கள் – கோவில் திறப்பு விழாவை நடத்துகின்றவர்களுக்கே ஆபத்து என்று சொல்கிறார்கள்.
யாருக்கு ஆபத்து என்று நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிந்தால் தெரியும்.
ஆகவே நண்பர்களே! வரும் தேர்தல் என்பது அரசமைப்புச் சட்டக் காப்பு என்பதைவிட, மக்களாகிய உங்களைப் பாதுகாக்கவேண்டும், உங்கள் பிள்ளை களைப் பாதுகாக்கவேண்டும்; உங்களுடைய எதிர் காலத்தை நிர்ணயிக்கவேண்டும்.
எங்களுக்காக அல்ல; தி.மு.க.வுக்காகவோ அல்ல; திராவிடர் கழகத்திற்காகவோ அல்ல; பதவிக்காக அல்ல; இவர் முதலமைச்சராக நீடிக்கவேண்டும் என்பதற்காக அல்ல.
‘‘எல்லோருக்கும் எல்லாமும்‘’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’ கிடைக்க வேண்டும்
உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும்; படித்த வர்கள் உத்தியோகத்திற்குச் செல்லவேண்டும். எல்லாவற்றையும் தாண்டி பெண்களும் – ஆண் களும் சமம் என்கிற சமத்துவத்தை உருவாக்க வேண்டும். அதையும் தாண்டி, ‘‘எல்லோருக்கும் எல்லாமும்”, ‘‘அனைவருக்கும் அனைத்தும்” கிடைக்க வேண்டுமானால், ஒரே வழி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் தெளிவான நிலைப்பாட்டை ஏற்று, ஒன்றிய ஆட்சியில் ‘இந்தியா’ கூட்டணியை அமர வைக்கவேண்டும்.
ஏமாறாதீர்கள்; ஏமாந்துவிடாதீர்கள் என்று எச்சரிப்பதுதான் எங்களுடைய வேலை!
எனவேதான், ஏமாறாதீர்கள்; ஏமாந்துவிடாதீர்கள் என்று எச்சரிப்பதுதான் எங்களுடைய வேலை என்று சொல்லி,
‘‘திராவிடம் வெல்லும் – அதை நாளைய வரலாறு சொல்லும், சொல்லும்!”
இக்கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர் களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்து என் னுரையை முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.