கேள்வி 1: காணொலிமூலம் பேசும் கூட்டம் – மக்களை நேரிடையாகச் சந்தித்துப் பேசும் பொதுக்கூட்டம் – இதில் தங்களுக்குப் பிடித்த கூட்டம் எது?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 1: மக்களை நேரிடையாகச் சந்தித்துப் பேசும் பொதுக்கூட்டமே. ஆனால், அதிகம் கேட்பாளர்கள் – உலகம் முழுவதும் கேட்கும் வாய்ப்பு காணொலி மூலம் கிட்டுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! ஒவ்வொன்றும் ஒரு வகை மகிழ்ச்சியையே தருகிறது.
—
கேள்வி 2: இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் சென்னையிலும், தூத்துக்குடியிலும் பார்வையிட்டுச் சென்ற பிறகும் நிவாரண நிதி தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லையே ஏன்?
– மு.முரளி, காஞ்சிபுரம்
பதில் 2 : “வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” – இந்தியா கூட்டணிக் கட்சிகளைக் கலந்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு – பொங்கல் முடிந்த பிறகு யோசிக்கிறோம்!
—
கேள்வி 3: 100 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் பரப்புரையால் ஜாதி பெயர் சேர்ப்பை மக்களே முன்வந்து நீக்கிய நிலையில், அமலாக்கத்துறை ஜாதி பெயர் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பியது ஏனோ?
– பா.கண்மணி, வேலூர்
பதில் 3 : எழுந்த கண்டனப் புயலைத் தாங்க முடியாததால்தான் வழக்கை அமலாக்கத் துறை திரும்பப் பெற்றுள்ளது. அமலாக்கத்துறை ஓர் அரசியல் பொம்மையாகி வருவது கண்டனத்திற்குரியது.
—
கேள்வி 4: தமிழ்நாட்டிற்கு வந்த மோடி அவர்கள், மறைந்த நடிகர் ‘விஜயகாந்த் புகழ்’ பாடுவதில் உள்நோக்கம் இருக்கிறதா?
– சோ.சுரேஷ், திருவண்ணாமலை
பதில் 4 : ‘பந்தலிலே பாவக்காய்’ கதைதான் நினைவுக்கு வருகிறது. வாக்குகளுக்குப் போடும் தூண்டில்தான் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். நோக்கம் – எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்காது – ஏமாற்றமே மிஞ்சும்!
—
கேள்வி 5: ஒன்றிய அரசு நடத்துகின்ற பொது நிகழ்ச்சி என்ற போதும் ‘‘அயோத்தி இராமன் கோவில் திறப்பு விழாவிற்கு இராம பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பு” என்று இராமன் கோவில் தலைமை அர்ச்சகர் கூறுவது சரியா?
– கே.கவுதம், கள்ளக்குறிச்சி
பதில் 5 : 1. முதலில் இராமன் கோவில் திறப்பு என்பதே ஒரு தேர்தல் வித்தை.
2. அரசமைப்புச் சட்ட ‘மதச் சார்பின்மை’யைக் குழிதோண்டிப் புதைக்கும் – அரசமைப்புச் சட்ட வேரறுப்பு.
3. ‘பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை’ என்ற பழமொழியையே நினைவூட்டுகிறது!
—
கேள்வி 6: உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழிகளை அமல்படுத்த ஒன்றிய அரசுக்குத் தயக்கம் ஏன்?
– இரா.இளங்கோ, கன்னியாகுமரி
பதில் 6 : ஹிந்தி பேசும் மாநிலங்களில் – நீதிமன்றங்களில் அது சரளமாக முழுமையாக நடைபெறுகிறது. மற்ற மொழிகளுக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் செய்ய முன்வர வேண்டும். எட்டாம் அட்டவணையில் உள்ள மொழிகளின் வசதி – சம வாய்ப்பு தந்தால் வழக்காடிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இதுபற்றி உச்சநீதிமன்றம் இணங்கி வரவேண்டும். கொள்கை முடிவாக ஏற்க வேண்டும்.
—
கேள்வி 7: புயல், மழை, பெருவெள்ளப் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகை குறித்து எதுவும் குறிப்பிடாது, தமிழ்நாடு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடியின் வஞ்சக மனப்போக்குக் குறித்து…?
– நே.பிரபு, தென்காசி
பதில் 7 : முன் கேள்வியில் உள்ள பதிலே (எண்: 2) போதுமானது. ஓரவஞ்சனையின் உச்சம் இது!
—
கேள்வி 8: கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு செய்யும் சேவைகளாக அப்பொழுது இருந்தன; ஆனால், இப்பொழுது அவை வியாபாரமாக மாறிவிட்டதே?
– செல்வம், கடையம்
பதில் 8 : வருத்தத்திற்குரிய ஒன்றுதான். மாற்றிட தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு மருத்துவமனைகளை நல்ல தரம் வாய்ந்த நிலைக்கு உயர்த்தி நடத்துகிறது.
நமது ‘திராவிட மாடல்’ அரசு நிச்சயம் அந்த நிலையை வெகுவாக மாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பாராட்டத்தக்கது!
—
கேள்வி 9: நீங்கள் விரும்பிப் படிக்கும் புத்தகம் எது?
– ஆ.ஆனந்த், மயிலாடுதுறை
பதில் 9 : தந்தை பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் கொண்ட புத்தகங்கள்; காரணம் அவை நமது அறிவு ஆராய்ச்சிக்கேற்ப பல விளங்காத விடயங்களை நன்கு விளக்கி வாழப் பயன்படுகிறது!
—
கேள்வி 10: கொடையில், சிறந்த கொடை எது? எதனால்?
– சி.சசி, சென்னை
பதில் 10 : விழிக்கொடை, உடல் உறுப்புக் கொடை, இறுதியில் உடற்கொடை. ஏனெனில், “செத்தும் வாழுகின்றார்கள் தொண்டற மனிதர்கள்” என்ற பேருண்மையை அவை பறைசாற்றுகின்றன. சிறந்த மனிதநேயம் – ஜாதி, மத, சடங்கு ஒழிப்பு எல்லாம் அதில் அடக்கம்.