• ஆழ்ந்த கருத்தும் தெளிவும் இல்லாத செயல்களையும், மனச் சுத்தம் இல்லாமல் செய்யும் விரதங்களையும் மேற்கொள்ளாதே. அவை எந்த பலனும் தரப் போவதில்லை.
• தீய செயல் உனக்கு வேதனை தரும். நல்ல செயல் உனக்கு இன்பம் தரும். ஆதலால் தீய செயல்களைத் தவிர்த்து நல்ல செயல்களை மட்டும் செய்.
• உன்னை நல்வழியில் நிறுத்தி, பகவான் புத்தரின் போதனைகளைக் கற்றுத் தெளிந்து, முக்தி அடையக் கிடைக்கும் வாய்ப்பினைத் தவற விடக் கூடாது. தவற விட்டால் நீ நரகத்தில் தள்ளப்படுவாய்.
• நீ வெட்கப்பட வேண்டிய செயல்களுக்கு வெட்கப்பட வேண்டும். வெட்கப்பட வேண்டாததற்கு வெட்கப்படக் கூடாது. இதில் மாறுதலானக் கருத்துகள் உன்னிடம் இருந்தால் நீ துயரமடைவாய்.
• எதற்குப் பயப்பட வேண்டுமோ அதற்கு நீ பயந்தே ஆக வேண்டும். எதற்குப் பயப்பட வேண்டியதில்லையோ அதற்குப் பயப்படக் கூடாது. இதில் மாறுதலானக் கருத்துகள் உன்னிடம் இருந்தால் நீ துயரமடைவாய்.
• தீது என்று ஒன்று இல்லாத போது, தீது என்று ஒன்று உள்ளது போலவும், தீது என்று ஒன்று உள்ள போது தீது என்று ஒன்று இல்லாதது போலவும் பொய்யான கருத்துகள் உன் மனதில் இருந்தால் நீ துயரமடைவாய்
• நற்பண்புகள் இல்லாமல் வீண் பழி கூறும் பலர் உன்னைத் சுற்றிலும் இருப்பார்கள். ஆனாலும் உன் மீது கூறப்படும் வீண் பழிச் சொற்களை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
• நீ மனிதருள் சிறந்தவன் ஆக வேண்டுமானால் உன்னை நீயே அடக்கி ஆள வேண்டும். பெரிய மனதோடு, உன்னை பிறர் தவறாகப் புரிந்து கொண்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
• சுறுசுறுப்பு கொஞ்சமும் இல்லாமல், பெரும் தீனியை விரும்பி உண்டு, படுக்கையில் உருண்டு, புரண்டு, படுத்துத் தூங்கி நீ பொழுதைப் போக்கும் பெரும் சோம்பேறியானால் மறுபடி மறுபடி பிறவி எடுத்துத் துன்பப்படுவாய்.
• முன்னெச்சரிக்கையான வாழ்வை விரும்பி எண்ணங்களில் நல்லவைகளை நன்கு காத்திடுக. சேற்றில் சிக்கிய யானை தானே முயன்று சேற்றிலிருந்து வெளியேறித் தப்பிக்கிறது. அது போல புதை குழி போன்ற தீயவைகளில் புதைந்து போகாமல் நீ, நீயாகவே வெளியேறு..
தொகுப்பு: ஞா.ம.சந்திரசேகரன்
நன்றி: ‘போதி முரசு’ – ஜனவரி 2024
சாமானியர்களுக்கு புத்தர் கூறும் அறவுரைகள்

Leave a Comment