வைக்கம் என்றாலே தமிழ்நாட்டில் நினைவுக்கு வருவது தந்தை பெரியார் தான் – கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலை சுற்றி அமைந்துள்ள தெருக்களில் மனிதர்கள் நடக்க கூடாது என்ற மனு (அ)நீதியை, ஆரிய கோட்பாட்டை எதிர்த்து வைக்கம் களத்தில் 603 நாட்கள் நடந்த தீண்டாமை ஒழிப்பு போரில் 141 நாட்கள் தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்டு அதில் 74 நாட்கள் சிறையில் இருந்தார்.
கையிலும், காலிலும் விலங்கு போட்டு கழுத்தில் மரப்பலகை மாட்டப்பட்டு கடும் சிறைத் தண்ட னையை அனுபவித்து போராடி வெற்றி பெற்று தெருக்களில் மனிதர்கள் நடக்க உரிமையை பெற்று கொடுத்தவர் தந்தை பெரியார். அதனால் அவர்
” வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார்.
“வைக்கத்துவீரர்” என்று யாரைச் சொன்னோம்?
‘வை கத்தி ‘ ‘தீண்டாமை கழுத்தில்’ என்று வரிப்புலியாய் களம் சென்று வாகை சூடி
வையத்து மக்கள் தந்த பட்டமன்றோ “வைக்கம் வீரர் ”
என்று கவிதை பாடினார் கலைஞர்.
அந்த வெற்றிப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் சென்னை பெரியார் திடலில் 28.12.2023 அன்று கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன், தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு, மானமிகு, சமூக நீதிக்கான சரித்திர நாயகர், மு. க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி மற்றும் சான்றோர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் நடைபெற வேண்டிய விழா தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மரணத்தால் தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது .
யாரால் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றதோ அவரின் இடத்திலேயே அந்த நூற்றாண்டு விழா நடைபெற்றது என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக மாறிவிட்டது.
02.01.2024இல் திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்று சிறப்புமிக்க வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஆங்கில பதிப்பை வழங்கினார்.
திராவிடத்தை எங்கு எப்படி யாரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கலையை கற்றவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
ராமகோபாலன் அவர்கள் கலைஞருக்கு வழங்கிய பகவத் கீதைக்கு பதிலாக அவருக்கு, ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்ற கலைஞர், ஆசிரியர், கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ என்ற நூலை வழங்கியது போல்.
பிரதமர் மோடிக்கு வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு மலரை வழங்கி இருக்கிறார், திராவிட குருகுலத்தில் பயின்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறு அடி பாயும் …
ஆரியத்தை விழுங்கும் திராவிடம்…
இது திராவிட மாடல்..
– பொன். பன்னீர்செல்வம்
திருநள்ளாறு
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்!!
Leave a comment