பள்ளிகளில் குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி!

Viduthalai
5 Min Read

குழந்தைத் திருமணங்களே இல்லாத தமிழ்நாடு எனும் நிலையை மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற்காக தமிழ் நாடு அரசு பல்வேறு நடவடிக் கைகளை முன்னெடுத்து வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக பள்ளிகளில் குழந்தைத் திருமணத் தடுப்பு உறுதிமொழி எடுக்க சமூக நலத்துறை அறிவுறுத்தியது.

அதனை பின்பற்றும் விதமாக அதற்கான உறுதி மொழிகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.

 தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான பள்ளிகளும் 16.10.2023 அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைத் திருமணத் தடுப்பு உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி, ‘குழந்தைத் திருமணங்கள் இல்லா’ உறுதிமொழியை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த உறுதி மொழியின் போது, “எனது பகுதியிலோ, சமூகத்திலோ குழந்தைத் திருமணம் நடப்ப தாக தெரியவந்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக் கைகளையும் எடுப்பேன்.

எனது சுற்றுப்புறத்தில், சமூகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் திருமணம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வேன். எங்கள் பகுதியில் குழந்தைத் தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். 

குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்விக்காகவும் செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்” என கூறி மாணவர்கள் படிவங்களில் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 2023ஆம் ஆண்டிலும் இப்படி ஓர் உறுதிமொழி எடுக்க வேண்டியதன் அவசியத்தை நினைத்தால் சமுதாயம் எத்தகைய அவல நிலையில் இருக்கிறது என்பது புலப்படும்.

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1891இல் முன் வைக்கப்பட்டு பல்வேறு தடைகளையும் தாண்டி 1929 செப்டம்பர் 28ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை முன்மொழிந்தவர் ராய் சாகிப் ஹாபி விலாஸ் சாரதா என்பவர் ஆவார் – அதனால்தான் இந்தச் சட்டம் சாரதா சட்டம் என்று கூறப்படுகிறது.

இந்த சட்டத்தைக் கொண்டு வரக்கூடாது என்று ஸநாதன பார்ப்பனர்கள் சல்லடம் கட்டி ஆடு ஆடு என்று ஆட்டம் போட்டனர்.

“ருது ஆவதற்கு முன்பே பெண்களுக்குக் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று எங்கள் சாஸ்திரங்கள் கூறுகின்றன. சட்டத்தை மீறி சிறைக்குப் போவோமே தவிர சாஸ்திரத்தை மீறி நரகத்திற்குப் போக மாட்டோம்” என்று பிரபல சாஸ்திரிகள் எல்லாம் போட்ட சத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. 

இன்றைக்குச் ஸநாதனத்தைப்பற்றிப் பேசினால் பாய்ந்து விழுந்து குதறுபவர்கள் சாரதா சட்டத்தை எதிர்த்தவர்கள் ஸநாதனிகள் என்பதிலிருந்தே ஸநாதனத்தின் யோக்கியதை எத்தகையது என்பது எளிதில் விளங்கும்.

இன்றைக்கு 95 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஓர் உரையாடலை எடுத்துக்காட்டினால் பார்ப்பனர் தம் ஸநாதனத்தின் யோக்கியதை எத்தகையது என்பது விளங்கும்.

‘இந்து’ ஏட்டுக்கு மூக்குடைப்பு

 ‘இந்து’ பத்திரிகையில் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் ‘இந்து’வை ஒரு கேள்வி கேட்டார். அதாவது “ஓ! ‘இந்து’வே நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே! இந்தக் காலத்தில் கூட 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்கு கலியாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா” என்று கேட்டார். அதற்கு ‘இந்து’ பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.

“10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிளையையும் வீட்டிற்குள் விட்டு கதவு சாத்துகின்றோமே. அதுதான் விவாகம்” என்று அயோக்கியத்தனமாய் பதில் எழுதிற்று.

இதற்கு அந்த சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் “ஓ ‘இந்து’வே 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வது போல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10, 12 வயது பெண்களின் நிச்சயார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்? அது கூட உங்கள் நிச்சயார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா” என்று கேட்டார்.

உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி போல் “இந்து” இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டது (‘திராவிடன்’ 13.3.1928 பக்கம் 7).

இதுதான் பார்ப்பனர்களின் யோக்கியதை! இப்பொழுதுகூட சிதம்பரத்தில் தீட்சிதர் குடும்பங்களில் குழந்தைத் திருமணம் என்பது சர்வ சாதாரணம்! சொத்துக்கள் (நடராஜன் கோயிலில் பகற்கொள்ளை அடித்தது) வேறு எங்கும் போய்விடக் கூடாது; தங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பின்னணி. சில நாட்களுக்கு முன் சிதம்பரம் தீட்சிதர் வீட்டில் நடைபெற்ற குழந்தைத் திருமணக் காட்சிப் பதிவு சமூக ஊடகங்களிலும் உலா வந்தது. வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைக்கு இருக்கிற சட்டப்படி மணமகனுக்கு 21 வயது, மணமகளுக்கு 18 வயது என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும்.

இதை மீறிக் குறைந்த வயதில் திருமணம் நடந்தால் இரண்டாண்டு சிறை – ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் உண்டு. இதன்படி சிறைக்குச் சென்றால் பிணை கூடக் கிடையாது.

திருமணத்தை நடத்தி வைத்தவர்கள், உடந்தையாக இருந்தவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

குழந்தைத் திருமணம் நடந்தால் அதுகுறித்து மாவட்ட சமூகநல அதிகாரியிடமும் 1098 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.

குழந்தைத் திருமணம் என்பது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினை அல்ல – ஒரு சமூகப் பிரச்சினையாகும்.

சிறு வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்யப்பட்டால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் என்பது விடியாத இருள் சூழ்ந்த பாழும் வீடாகும்.

கல்வி தடைபடுகிறது; சிறு வயதில் கர்ப்பமாகி, குழந்தை பெற்றுக் கொண்டால் ஏற்படும் உடல் நலக்கேடு சொல்லும் தரமன்று.

வட மாநிலங்களில் குழந்தைத் திருமணம் என்பது சர்வ சாதாரணம்; – தமிழ்நாட்டில் அருகி இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமுமே!

பள்ளிகளில் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து உறுதிமொழி எடுக்குமாறு தமிழ்நாடு அரசு கல்வித்துறை செய்திருக்கும் ஏற்பாடு வரவேற்கத்தக்கதும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *