ஆளுநருக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்!

Viduthalai
2 Min Read

 முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு
கவுரவ முனைவர் பட்டம் வழங்க அனுமதி மறுப்பதா?

அரசு, தமிழ்நாடு

சென்னை, அக். 20  -முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்க ஆளுநர் மறுப்பதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர் கல்வித் துறைஅமைச்சர் முனைவ ர் க.பொன்முடி அவர்களின் அறிக்கை வருமாறு: –

1922 ஜூலை 15இல் பிறந்த மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும், சிறந்த சட்டமன்ற மேனாள் உறுப்பினருமான என். சங்கரய்யா அவர்கள், நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு  (Syndicate)  கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம்  (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக்  (Senate) கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் திரு.என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt)  வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக 

ஆட்சிக் குழுவில் தீர்மானம்!

மேற்படி கவுரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம், 1965, அத்தியாயம் XX, தொகுதி  I இல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வத்தியாயத்தில் கவுரவ முனைவர் பட்டயம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் திரு.என். சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம் (D.Litt)  வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர் – வேந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். 

அனுமதி வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்!

மேற்காண் நிலையில் 02.11.2023 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Senate)  மற்றும் ஆட்சிப் பேரவையில் (Syndicate)  நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி என்.சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்குமாறு ஆளுநர் – வேந்தர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார். இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி தமது அறிக்கையில்கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *