இந்தியத் துணைக் கண்ட வரலாற்றிலேயே – ஜாதி – தீண்டாமை என்னும் மனித குலத்தின் மாண்பைப் பீடித்த நோயை எதிர்த்துத் தொடங்கப்பட்ட கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு என்ற வரலாற்றுக் கிரீடத்தைப் பொறித்த காலத்தின் மடியில் நாம் வாழ்கிறோம். (30.3.1924 – 23.11.1925).
1924 ஜனவரி 20ஆம் நாள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தீண்டாமை விலக்குக் குழு – கேரள மாநில காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் அமைக்கப்பட்டது.
வைக்கம் கோயிலின் நான்கு திசைகளிலும் கோயிலை நோக்கி உள்ள நான்கு சாலைகளிலும் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படும் ஈழவர்கள், புலையர்கள் நடக்க உரிமை இல்லை என்ற கொடுமை – இதற்குப் பெயர்தான் அர்த்தமுள்ள ஹிந்துமதம்? என்பது.
வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னின்று நடத்திய கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடிகள் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், போராட்டம் தொடரப்பட முடியாமல் ஒரு கையறு நிலையை எட்டியது.
காந்தியாரிடமும் ராஜாஜியிடமும் போராட்டத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், அவர்கள் கை விட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தந்தை பெரியாரை போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்குமாறு கேரளத் தலைவர்கள் தந்தியின் மூலம் கேட்டுக் கொண்ட அழைப்பினை ஏற்று, தந்தை பெரியார் வைக்கம் சென்றடைந்தார் (13.4.1924).
தந்தை பெரியார் வைக்கம் வந்தாலும் வந்தார் – குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள முன்னணித் தலைவர்கள் கைக்குள்ளிருந்த போராட்டம் மக்கள் போராட்டமாக எழுச்சி வடிவம் கொண்டது.
நாம் நடந்தால் தீட்டுப்பட்டு விடும் என்று கூறும் வைக்கத் தப்பனை (கடவுளை) குப்புறப் போட்டுத் துணி துவையுங்கள் என்று அந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியாரைத் தவிர வேறு எவரால்தான் உதடுகள் அசைக்க முடியும்?
ஒரு கொடுமை தலை தூக்கிப் படம் எடுத்து ஆடுமானால், அந்தக் கொடுமையின் மூல ஊற்று – மூல வேர் எங்கிருக்கிறது என்று தேடி அழிவு வேலையைச் செய்யும் முதிர்ந்த சிந்தனை போராட்டக் குணம் என்பது சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்குவதற்கு முன்பே அவரிடம் ஆட் கொண்டது என்பதை இந்த இடத்திலேயே பளிச் சென்று காணலாம்.
1922 – திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டிலும் இராமாயணத்தையும் மனுதர்மத்தையும் கொளுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கியதையும் இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்பது சாலச் சிறந்தது.
வைக்கம் போராட்டத்திற்காக தந்தை பெரியார் இரு முறை சிறை சென்றார். 141 நாட்கள் போராட்டக் களத்தில் நின்றார். 74 நாட்கள் (இருமுறை) கொடுஞ் சிறைவாசம் அனுபவித்தார்.
தந்தை பெரியார் சிறை வாசம் அனுபவித்த நிலையில், அவர் மூட்டிய போராட்டத் தீ அணைந்து போய் விடவில்லை.
தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை சா.ரா. கண்ணம்மாள் அவர்களும் போராட்டத்தைத் தொய்வடையாமல் முன்னெடுத்துச் சென்றனர்.
பொது வாழ்க்கையில் அதுவும் சமூகப் புரட்சிப் போராட்டத்தில் முதன் முதலில் பெண்கள் பங்கேற்ற பெருமை தந்தை பெரியார் குடும்பத்தை சார்ந்ததே!
காங்கிரசில் தந்தை பெரியார் இருந்தபோதே காந்தியார் அறிவித்த மதுவிலக்குப் போராட்டத்தை தலைமை தாங்கி முன்னின்று நடத்திய பெண்களும் மேலே கூறப்பட்ட தந்தை பெரியார்தம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தாம். (1921)
மதுவிலக்குப் போராட்டத்தைத் தொடர்வதா, கை விடுவதா என்பது நம் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்று மும்பை காங்கிரஸ் மாநாட்டில் காந்தியார் கூறும் அளவுக்கு, தந்தை பெரியாரின் குடும்பத்துப் பெண்கள், இந்தியப் பொது வாழ்வில் முற்போக்கு விண்மீனாக ஜொலிக்கின்றனர்.
வைக்கத்தில் தீண்டாமைக்குக் காரணம் – மன்னர் என்பதைவிட அங்குள்ள நம் பூதிரிப் பார்ப்பனர்கள்தான் காரணம் – என்று தந்தை பெரியார் கணிப்பைக் கவனித்துப் பாருங்கள்.
தந்தை பெரியாரை சாகடிக்க சத்ரு சம்ஹார யாகம் நடத்தியவர்கள் ஆயிற்றே அந்த நம்பூதிரிகள்!
தந்தை பெரியார் எடுத்த எந்தப் போராட்டமும் இடை நின்றது இல்லை – வெற்றி வாகை சூடாமலும் இல்லை.
அந்த வகையில் இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் மனித உரிமைப் போராட்டம் – வைக்கம் போராட்டமே! அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ‘மகத்’ என்ற இடத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்க நடத்திய போராட்டமும் – வைக்கப் போராட்டத்தின் தாக்கமே என்றால், வைக்கம் போராட்டத்தின் உச்சத்தின் ஆளுமையை உணர்ந்து கொள்ளலாம்.
“வைக்கம் வீரர்” என்று பட்டமளித்து ‘நவசக்தி’ ஏட்டில் தலையங்கம் தீட்டியவர் திரு.வி.க. என்பதும் மிக முக்கியம்.
நூற்றாண்டைக் காணும் அந்தப் போராட்டத்தை மய்யப் படுத்தி நூற்றாண்டு விழாவை கேரள மாநில அரசும் தமிழ்நாடு அரசும் நடத்தியிருப்பது – தந்தை பெரியாரின் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி! மனித உரிமைக் கோட்பாட்டுக்கான மாமகுடம்!
தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் (28.12.2023) சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மிகச் செறிவாக முழு நிலவு ஒளியைப் போல கூறினார்.
வைக்கம் போராட்டமானது – மனித உரிமைப் போராட் டங்களுக்கெல்லாம் தாய்ப் போராட்டமும், உந்து சக்தியும், தாக்கமும் அளித்த – கலங்கரை விளக்காகும் – காலத்தின் கல்வெட்டாகும்.
சென்னையில் தமிழ்நாடு, கேரளா இரு மாநில முதல் அமைச்சர் களும், திராவிடர் கழகத் தலைவரும் ‘பொது மக்கள் வெளியில் பங்கேற்று நடக்கவிருந்த வைக்கம் நூற்றாண்டு விழா’ கேப்டன் விஜயகாந்தின் மறைவால், நடத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டது என்றாலும் –
தந்தை பெரியார் நினைவிடத்தில் உணர்வுப் பூர்வமாகவும் கொள்கைப் பூர்வமாகவும் இரு மாநில முதல் அமைச்சர்களும் பங்கேற்று நடத்திய நிகழ்வு – தந்தை பெரியாரின் “சிக்கனத்தோடு!” செறிந்த சீலமிக்க – வரலாற்றில் என்றும் ஒளிவீசும் ஒரு பெரும் நிகழ்ச்சியாகும்.
ஜாதி – தீண்டாமை என்னும் மிச்ச சொச்சங்களை முற்றிலும் வேரறுத்து – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!”, அனைவருக்கும் அனைத்தும்!” என்ற பொதுமை உலகத்திற்குத் தந்தை பெரியார் என்று பெயர் சூட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!
வாழ்க வைக்கம் வீரர் பெரியார்!
வைக்கம் வீரர் வாழியவே!
Leave a comment