ஜாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஒரே களம்தான் தந்தை பெரியாருக்கு! 1922 ஆம் ஆண்டு, திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் பேசுகிறார் – 1973, டிசம்பர் 19 ஆம் தேதி தியாகராயர் நகர் பொதுக்கூட்டம் வரையில் அதைப் பேசுகிறார்!

viduthalai
10 Min Read

1922 ஆம் ஆண்டிலிருந்து ஒரே பார்வை,
ஒரே கொள்கை, ஒரே களம்தான்!
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, டிச.28 ஜாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழு வதும் ஒரே களம்தான் தந்தை பெரியாருக்கு. 1922 ஆம் ஆண்டு, திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் பேசுகிறார். காங்கிரஸ்காரராக இருக்கும் பொழுது அவர் பேசுகிறார். 1973, டிசம்பர் 19 ஆம் தேதி தியாகராயர் நகர் பொதுக்கூட்டம் வரையில் அதைப் பேசுகிறார். 1922 ஆம் ஆண்டிலிருந்து ஒரே பார்வை, ஒரே கொள்கை, ஒரே களம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளும் – தொடரும் அறைகூவல்களும்’’ – கருத்தரங்கம்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளான 24.12.2023 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளும் – தொடரும் அறைகூவல்களும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

புகைக்குண்டைப் பார்த்துக்கூட அவர்கள்
இந்த அளவிற்கு அலறவில்லை!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வளவு உரிமை கொடுத்து வைத்திருக்கிறார்கள், இப்படி இருக் கும்பொழுது, அப்துல்லா, ஒரு கருத்தை மேற்கோள் காட்டுகிறார். அவர் மேற்கோள் காட்டிய கருத்தைக் கண்டு அவர்கள் இந்த அளவிற்கு அலறுவானேன்?
இங்கே உரையாற்றும்பொழுது சுப.வீரபாண்டியன் அவர்கள் சொன்னார், ‘‘புகைக்குண்டைப் பார்த்துக்கூட அவர்கள் இந்த அளவிற்கு அலறவில்லை. பெரியார் என்ற பெயரைக் கேட்டவுடன், அதை வெடிகுண்டையும் தாண்டியது என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்றார்.
ஆனால், உண்மையில் அப்படிப்பட்டதல்ல. பெரியார் கொள்கை என்பது என்ன? அவர் மனித நேயத்தை விரும்பியவர் என்பதற்கு ஒன்றைச் சொல் கிறேன். மக்கள் மத்தியில் இதனை எடுத்துச் சொல்லவேண்டும். பெரியார் மேடை என்பது எதையும் மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்வதுதான்.

தந்தை பெரியாரின் நூற்றாண்டில் ஜனதா அரசாங்கம் வெளியிட்ட, சிறப்பு அஞ்சல் தலை!
என்னுடைய கைகளில் இருப்பது, தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவின் போது, பெரியாருக்கு, ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., உள்பட சேர்ந்த ஜனதா அரசாங்கம் வெளியிட்ட, சிறப்பு அஞ்சல் தலை – 17.9.1978 இல். அந்த அஞ்சல் தலைக்குப் பக்கத்தில் குறிப்புப் போட்டிருக்கிறார்கள். அந்தக் குறிப்பில் என்ன போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.
இந்த வெளியீடு யாருடையது?
தனிப்பட்ட நபருடையது அல்ல. ஒன்றிய அர சாங்கம் – அன்றைய ஒன்றிய அரசாங்கம் என் றாலும், இன்றைக்குப் பிரதமர் மோடி போன்ற வர்களால் கடுமையாகத் தாக்கப்படுகின்ற காங் கிரஸ் அரசாங்கம் அல்ல. அன்றைக்கு வாஜ்பேயி வெளியுறவுத் துறை அமைச்சர். மொரார்ஜி தேசாய் பிரதமர். அத்வானியும் ஒன்றிய அமைச்சராக இருந்தார்.
அந்த ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்து தான் இந்த அஞ்சல் தலையை வெளியிட்டார்கள்.
‘‘E.V. Ramasami, or E.V.R. as he was popularly known, was born on Sept. 17, 1879 at Erode in Tamil Nadu. He left school at the age to ten and joined his father in business when he was twelve.
The Patriotic fervour of Ramasami led him to give up to his lucrative business and join the Indian National Congress in is its struggle for freedom. He became an ardent fighter and came to be closely associated with Rajaji. Ramasamy courted imprisonment several times during the freedom movement.
The Satyagraha he launched at Vaikkom in Kerala against the despicable practice of barring entry of people of certain castes into the streets where people of other castes lived was a success and he earned the title ‘Vaikkom Hero’. He left the Congress in 1925 and carried on a crusade against the caste-system and advocated prohibition. E.V.R. strove for the emancipation of the exploited masses and weaker sections of society.
In 1925 he founded the Self-Respect Movement, a socio-political organisation of which he was the President. He started a weekly, “Kudi Arasu” (Republic) and later a daily, “Viduthalai” (Freedom) to propagate the principles of his movement. In particular, Ramasami preached inter caste marriages and re-marriage of widows. It was his firm conviction that orthodoxy, superstition, social discrimination and may other evils which persisted in the society should go. He waged a relentless battle against these till the very end of his life.
In 1938 E.V.R. was elected President of the Justice Party. He started a movement in the cause of Tamil during this period. At the famous Salem Conference in 1944 he and his lieutenant the late C.N. Annadurai (later Chief Minister of Tamil Nadu) converted the Justice Party into a new organisation called “Dravidar Kazhagam”.
An ardent fighter, an avowed revolutionary and a hard-headed rationalist E.V.R. was simple and humane. He passed away on December 24, 1973 when he was 94.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘ஈ.வெ.இராமசாமி அல்லது ஈ.வெ.ரா. என்று பிரபலமாக அறியப்பட்டவர். செப்டம்பர் 17, 1879 அன்று தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார். 10 ஆம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு, 12 ஆம் வயதில், தன் தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபட்டார்.
தந்தை பெரியார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வணிகராக இருந்த போதே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் தீவிரமாக விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது ராஜகோபாலாச் சாரியுடன் நெருங் கிய நட்பில் இருந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பல்வேறு காலகட்டங்களில் சிறைதண்டனையும் பெற்றார்.
வைக்கம் தெருக்களில் குறிப்பிட்ட வகுப் பாரைத்தவிர மற்றவர்கள் நடக்க கூடாது என்ற கொடுந் தீண்டாமை, அவலம் இருந்ததை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார். இது கேரளா முழுக்க பரவி தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்றார். இதனால் தந்தை பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்று அழைக்கப்பட்டார்.
1925 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் களமிறங்கி, பாதிக்கபப்ட்ட சமூகத்திற்காகப் போராடத் துவங் கினார். 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பிறகு அவரே தலைவராக இருந்தார்.
அவர் ‘குடியரசு’ என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். அதுவே பின்னாளில் ‘விடுதலை’ என்ற பெயரில் நாளிதழாக வெளிவந்து சுயமரியாதை இயக்கத்தின் பரப்புரைக்குப் பயன்பட்டது.
அந்தக் காலகட்டத்திலேயே ஜாதிமறுப்பு, கணவனை இழந்த பெண்களின் மறுமணம் போன்றவற்றை ஊக்குவித்தார்.
அவர் பழைமைவாதம், மூடநம்பிக்கை உள் ளிட்ட சமூகத்தில் புரையோடி இருக்கும் பழக்கங் களை ஒழிக்க தனது இறுதி நாள் வரை போராட்டக் களத்தில் இறங்கினார்.
1938 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது இயக்கத்தின் பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். 1944 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா முன்மொழிய, நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தீவிரப் போராளியும், தலைசிறந்த புரட்சியாள ரும், தீவிர பகுத்தறிவுவாதியுமான தந்தை பெரியார், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து இறுதிவரை சக மனிதர்களின் சுயமரியாதைக்காகவும், சமூகநீதிக் காகவும் தொடர்ந்து போராடியவர். அவர் தனது 94 ஆவது வயதில், டிசம்பர் 24, 1973 அன்று மறைவுற்றார்.’’
இதைச் சொல்வது யார்?
அரசாங்கம்!
எந்த அரசாங்கம்!?
ஒன்றிய அரசாங்கம்.
எந்த ஒன்றிய அரசாங்கம்?
பி.ஜே.பி. என்ற பெயர் கிடையாது அப்பொழுது. ஜனசங்கம் ஆட்சி செய்த அரசாங்கம்.

சிறப்பு அஞ்சல் உறை
வெளியிடப்பட்டது!
அதற்கடுத்து வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர் களின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாளின்பொழுது, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
எனவே, அவர்களுடைய ஆட்சியிலேயே சிறப்பு அஞ்சல் தலை, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டன.
பிறகு எப்படி நீங்கள் பெரியார் என்ற பெயரைக் கேட்டவுடன், இன்றைக்குத் துடிக்கின்றீர்கள் என்று சொன்னால், ‘‘உங்களுடைய வார்த்தையை, நீங்களே விழுங்குகிறீர்கள்” என்று அர்த்தம்.
எனவே, பெரியார் என்ற பெயரைக் கேட்டு, நீங்கள் அலறுவது ஏன்? அதற்கு என்ன காரணம்?

ஜாதிப் பிடிப்புதான்;
ஜாதி ஒழியக்கூடாது என்பதுதான்!
ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இன்னமும் இருக்கிற அந்த ஜாதிப் பிடிப்புதான். ஜாதி ஒழியக்கூடாது என்பதுதான்.
நாங்கள் உறுதிமொழி எடுத்ததைப்பற்றி இங்கே உரையாற்றிய சகோதரர்கள் சொன்னார்கள்.
இப்போது போராட்டக் களம் என்ன?

போராடுகிறவர்கள் வேண்டுமானால் மாறலாமே தவிர, களம் எப்பொழுதும் தயாராக இருக்கும்!
பெரியார் அவர்கள் மறைந்து 50 ஆண்டு காலத்திற்குப் பிறகு, போராட்டக் களம் – அந்தப் போராட்டக் களம் எப்பொழுதும் தயாராக இருக்கும். போராடுகிறவர்கள் வேண்டுமானால் மாறலாமே தவிர, களம் எப்பொழுதும் தயாராக இருக்கும்.
இராணுவத்தில் தலைவர்கள் மாறுவார்கள்; ஆனால், இராணுவம் அதனுடைய பணியைத் தொடர்ந்து செய்யுமோ அதுபோலத்தான் நண்பர்களே!
இதில் ஆழமாக கவனிக்கவேண்டிய செய்தி என்ன வென்றால், நாம் பாதிக்கப்பட்டு இருக்கின்றபொழுது, அதற்கு ஆதாரமாக பெரியாரையே எடுத்துக்காட்டு கிறோம்.
பெரியார் எப்படி ஒரு போராயுதம் – பேராயுதம் என்பதற்கு இது ஒன்று போதாதா?

பெரியார், மின்சாரம் போன்றவர்!
வெடிகுண்டு போன்றல்ல; மின்சாரத்தைத் தொட்டதைப்போல – மின்சாரத்தைத் தொட்டால், ஷாக்கடித்து தூக்கி எறிவது போன்று மிகப்பெரிய அளவிற்கு இன்றைக்கு அவர் வந்திருக்கின்றார் என்று சொன்னால், அதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

நியாயங்கள் நிச்சயம் தோற்காது;
உண்மை வெல்லும்!
நியாயங்கள் நிச்சயம் தோற்காது; உண்மை வெல்லும்! அந்த வகையில் நாம் பார்க்கின்றபொழுது, இது ஒரு பெரிய வாய்ப்பு!
பெரியார் சொல்லுகிறார், ‘‘என்னுடைய போரட்டத்தில் ரகசியம் கிடையாது; என்னுடைய போராட்டத்தில் எந்த வன்முறையும் தலைதூக்க நான் அனுமதிக்கமாட்டேன். கைது செய்வதற்குக் காவல்துறையினர் வருகிறார்களா, அவர்கள் வருவதற்குமுன் நான் கைதாவதற்குத் தயா ராவேனே தவிர, ஒருபோதும் நான் தலைமறைவு ஆனவன் இல்லை” என்பார்.
இந்த நாட்டில், போராட்டம் நடத்துவதற்கு முன், போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டு, அனுமதி வாங்கி போராட்டம் நடத்துங்கள் என்று தொண்டர்களுக்குச் சொன்ன ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

பெரியார் என்று சொன்னால்,
பொது ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டு!
அவ்வளவு கட்டுப்பாடு. பெரியார் என்று சொன் னால், பல முனைகள் உண்டு. பெரியார் என்று சொன்னால், பொது ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டு!
150 ஆம் ஆண்டிலும் கொண்டாடுவார்கள் – மக்கள் கொண்டாடுவார்கள்
அப்படிப்பட்ட பெரியாரை, நீங்களே பாராட்டிய பெரியாரை, கொண்டாடிய பெரியாரை – நூற்றாண்டிலும் கொண்டாடினீர்கள்; நூற்றி இருபத்தைந்தாம் ஆண் டிலும் கொண்டாடினீர்கள். இப்பொழுது 150 ஆம் ஆண்டிலும் கொண்டாடுவார்கள் – நீங்கள் அல்ல – மக்கள் கொண்டாடுவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், பெரியாரின் பெயரைக் கேட்டாலே ஏன் இவ்வளவு ஆத்திரப்படு கிறார்கள்?

குறுக்குச்சால் விட்டுப் பார்த்தார்கள்
பெரியார் வெற்றி பெறுகிறாரே, அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்கின்ற நேரத்தில், நீதிமன்றங்கள் தங்கள் கைகளில் கிடைத் திருப்பதை வைத்துக்கொண்டு, கொஞ்சம் குறுக்குச்சால் விட்டுப் பார்த்தார்கள்.
ஆனால், ‘திராவிடம் வென்றது!’ கலைஞருடைய சட்டங்கள், அதற்கடுத்து தொடர்ச்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சியில்!

வாழ்நாள் முழுவதும் ஒரே களம்தான்!
ஜாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஒரே களம்தான் தந்தை பெரியாருக்கு.
1922 ஆம் ஆண்டு, திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் பேசுகிறார். காங்கிரஸ்காரராக இருக்கும்பொழுது அவர் பேசுகிறார்.
1973, டிசம்பர் 19 ஆம் தேதி தியாகராயர் நகர் பொதுக்கூட்டம் வரையில் அதைப் பேசுகிறார்.
1922 ஆம் ஆண்டிலிருந்து ஒரே பார்வை, ஒரே கொள்கை, ஒரே களம்.
(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *