பாதிப்புகள் மிகக் கடுமை – இந்திய அரசின் நிதி அதிகம் தேவை : முதலமைச்சர் கோரிக்கை

viduthalai
1 Min Read

சென்னை, டிச.27 மாநில பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே இருக்கும் நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு மிகுதியாக உள்ளதால், ஒன்றிய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே 2-ஆவது நீண்ட கடலோரப் பகுதிகளை கொண்டுள்ளதுடன், கடந்த நூற்றாண்டுகளில் 50 புயல்களை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு, தொடர்ந்து இத்தகைய இயற்கைச் சீற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுடன், தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையும் பெரும் சேதம் விளைவித்துள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே உள்ள நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு மிகுதியாக உள்ளது. எனவே, இதுவரை இல்லாத அளவிலான இந்த சூழலை தமிழ்நாடு எதிர்கொள்ள ஒன்றிய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று அக்கறையுடன் கோருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *