டாக்டர் கேதன் தேசாய் கொடுத்த விளம்பரத்தின் பின்னணி என்ன?

viduthalai
2 Min Read

நேற்றைய நாளேடுகளில் ஒரு விளம்பரம். விளம்பரம் கொடுத்தவர் மருத்துவக் கவுன்சில் மூலமாக பெரும் கொள்ளை அடித்தவர்.
அவர்தான் கேதன் தேசாய். அடித்த ஊழல் கொள்ளை என்னென்ன தெரியுமா? ரூ.1700 கோடிக்கு தங்கம், ரூ.800 கோடிக்கு ரொக்கம் வைத்திருந்த ‘ஏழை’ குஜராத்தி? அவர் வீட்டிலேயே இருந்து எடுக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அவருக்கு என்ன கிடைத்துள்ளது? தண்டனை ஏதுமில்லை.
உலக மருத்துவ கவுன்சில் தலைவராகி இருக்கிறார்.
இவர் இந்தியாவின் ஏடுகளில் எல்லாம் தன் படத்தையும், பிரதமர் படத்தையும், உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்தையும் இணைத்து பெரிய அளவு விளம்பரம் கொடுத்துள்ளார்.
இந்த கேதன் தேசாய் குறித்து இன்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம் பெற்றிருப்பது என்ன?
ஊழல் குற்றச்சாட்டில் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் பதவி நீக்கம் (15.12.2001)
“இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் கேதன் தேசாய் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப் பட்டதையடுத்து அவரை அப்பதவியில் இருந்து நீக்கி டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேதன் தேசாய் இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவ ராகவும், இந்திய மருத்துவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மருத்துவ சங்கத்திற்குத் தலைவராகவும் இருந்தார். இவர் இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவராக இருந்த போது. இவரது பதவிக்காலத்தில் ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் துவங்க பல கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது
1999ஆம் ஆண்டு ஹரிஷ் பல்லா என்ற மருத்துவர் கேதன் தேசாய் ஊழல் செய்ததற்கான சான்றுகளை அளித்து, அவரை பதவி நீக்கக்கோரி வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையில் மருத்துவ சேர்க்கையில் கேதன் தேசாய் பெரிய அளவில் ஊழல் செய்தது உறுதியானது
நீதிமன்றத்தில். புனே மற்றும் காஜியாபாத்தில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கு வதற்காக லஞ்சம் வாங்கிய சான்றுகளும் சமர்ப்பிக்கப் பட்டன.
2000 ஆம் ஆண்டு டாக்டர் தேசாய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் பலகோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன.
இதனை அடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் பதவியை டாக்டர் தேசாய் தவறாக பயன் படுத்தியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
20 ஆண்டுகள் ஓடி விட்டன. மக்கள் மறந்திருப்பார்கள். நேற்றைய இந்திய ஏடுகளில் ஒரு விளம்பரம் கொடுத் துள்ளார். என்ன அந்த விளம்பரம்?
மருத்துவத் துறையினருக்கு இடையூறாக இருந்து வந்த இந்திய குற்றவியல் சட்டம் 304அய் (தவறுதலாக ஏற்பட்ட மரணம்) “பாரதிய நியாய் சங்ஹிதா 26” என்று மாற்றியதற்கு நன்றி தெரிவித்து விளம்பரமாம்.
இதற்குள்ளிருக்கும் பூடகங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்! இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்து பெரும் கொள்ளை அடித்த ஓர் ஆசாமி இப்படி யொரு விளம்பரத்தை ஏடுகளுக்கெல்லாம் கொடுத்துள்ளார் என்றால் இவர்யார்? இவருக்கு யார் யார் எல்லாம் துணைப் போகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
‘நீட்’ தேர்வின் மூல கர்த்தாவும் இந்தக் கேதன் தேசாய் தான் என்பது நினைவிருக்கட்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *