ஜெய்ப்பூர், அக்.22 – ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;- “நரேந்திர மோடியும், பா.ஜ.க.வும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதுதான் அவர் களின் ஒரே இலக்கு. மக்கள் நலன் அல்ல. அவர்களுக்கு தங்களை வலுப்படுத்திக் கொள்வதில்தான் ஆர்வம் இருக்கிறது. ஏழைகளின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து மிகப்பெரிய தொழிலதிபர் களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கொள் கையாக இருக்கிறது. எனவே, ராஜஸ்தான் மக்கள் மிகுந்த எச்ச ரிக்கையுடன் இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் மாநிலத்தை ஒற்றுமைப்படுத்தும். சேவை மற்றும் இரக்கம் சார்ந்த அரசியல் மூலம்தான் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்த முடி யும். வளர்ச்சி குறித்து பேசுவதற்கு பதிலாக மதம் மற்றும் ஜாதி குறித்து பா.ஜ.க. ஏன் பேசுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.