ஒன்றிய அரசு, பேரிடராக அறிவித்து – தமிழ்நாடு முதலமைச்சர் கோரும் நிதியை உடனடியாக அளிக்கவேண்டும்! தமிழ்நாடு அரசின் நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

viduthalai
5 Min Read

* தென்மாவட்டங்களில் மழை-வெள்ளத்தால் மக்களின் அவதி கொஞ்சநஞ்சமல்ல!
* அரசியல்வாதிகள் அரசியல் செய்ய இதுவல்ல தருணம்!

யாரும் எதிர்பாரா அளவுக்கு இயற்கையின் பெரு சீற்றத்தால் – மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் அவ திக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளைப் புயல் வேகத்தில் செய்துவருகிறது. ஒன்றிய அரசு பேரிடராக அறிவித்து முதலமைச்சர் கோரிய நிதியை அளிக்க முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களில் பெய்த மழை 150 ஆண்டுகாலத்தில் எப்போதுமே பெய்யாத பெருமழையாகும்!
வானிலை ஆய்வு மய்யத்தின் அறிவிப்புகளையும் மீறிய அளவிற்குப் பெய்த கொடும் மழை – எடுத்துக்காட்டாக காயல்பட்டினம் என்ற பகுதியிலும், தூத்துக்குடி நகரப் பகுதியிலும் 95 சென்டி மீட்டருக்குமேல் மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க வைத்தது மட்டுமல்ல, வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து, அங்கு பெருஞ்சேதத்தினை உருவாக்கி, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, முடக்கிப்போடும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனது!

மழை, வெள்ளம் – பம்பரமாகச்
சுற்றிச் சுழலும் அரசு இயந்திரம்!
மழை எப்படி தொடர்ந்து பெய்ததோ, அதை மிஞ்சும் அளவுக்கு வெள்ளம் பெருகி, சில ஊர்களில் கண்மாய் உடைந்து, பாதைகள் மூழ்கியதால், சோகத்திலிருந்த கிராம மக்களுக்குப் பால், உணவு, நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்டோரைச் சென்றடைய – தேசியப் பேரிடர் தடுப்புப் படையினரும், இராணுவத்தினரும்கூட விரைந்து செல்ல முடியாத நிலையிலும், படகுகள், ஜே.சி.பி. வாகனம், ஹெலிகாப்டர்மூலமும் உணவு மற்றவற்றை விநியோகம் செய்ய அரும்பாடுபடும் நிலை.
அமைச்சர்களும், அதிகாரிகளும் கொண்ட அரசு இயந் திரம் மிக வேகமாகச் சுழன்றிட முதலமைச்சர் தொலைப் பேசி, காணொளிமூலம் நிலவரங்களைக் கண்காணித்து ஆணைகளைப் பிறப்பித்துள்ளார்.

பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர்
நேரில் கோரிக்கை!
புதுடில்லியில் பிரதமர் மோடி அவர்களை நேற்று (19.12.2023) இரவு 10.30 மணிக்கு நேரில் சந்தித்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய புண்கள், காயங்கள் ஆறாத நிலையில், அதைவிடக் கொடுமையாக – புயல் இல்லாத நிலையில், மிக அதிமான கன மழை தென்மாவட்டங்களில் என்பதையெல்லாம் எடுத்துக் கூறி, நிவாரணத்திற்கு அதிக கூடுதல் தொகையினை உடனடி யாகத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தித் திரும்பி, நாளை (21.12.2023) பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்கிறார்.
டில்லியிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல முதலில் திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட முதலமைச்சரின் பயணத் திட்டம், ஒரு நாள் தள்ளியதற்குக் காரணம், தென்மாவட்டங்களில் மழையால் பாதித்த பகுதிகளை ஒன்றிய கண்காணிப்புக் குழு இன்று (20.12.2023) பார்வை யிட்டு, சேதங்களை மதிப்பீடு செய்து, ஒன்றிய அரசுக்கு அறிக்கை தரவிருப்பதால், அந்த ஒன்றியக் குழுவினரோடு அரசு அதிகாரிகள் செல்லவேண்டும் என்பதால்தான்!

பேரிடராக அறிவிக்கட்டும் ஒன்றிய அரசு!
ஒன்றிய அரசு – மனிதநேயத்துடன், பாரபட்சமில்லாத ஆளுமை என்பதைக் காட்டிக் கொள்ளவேண்டுமானால், மழை வெள்ளப் பாதிப்பை ‘தேசியப் பேரிடர்’ என்று அறிவித்து, அதையொட்டி போதிய நிவாரணத்திற்கு உட னடியாக, காலந்தாழ்த்தாமல் செயல்பட முன்வரவேண்டும்!
இவ்வாறிருக்கும் நிலையில், பரிதாபமும், பட்சாதாபமும் காட்டி, அனைத்து மக்களின் அவலங்களையும், கண்ணீ ரையும் துடைக்கப் போட்டி போட்டுக்கொண்டு முன்வராமல், இதுதான் தங்களுக்குச் சரியான சந்தர்ப்பம் என்று ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று தி.மு.க. ஆட்சிமீது குற்றஞ்சாட்டி சிலர் சரவெடி வெடிக்கிறார்கள் – சற்றும் மனிதநேயமின்றி!
எதிர்க்கட்சித் தலைவரின் கடமை என்ன? முதலில் உதவிகள்; பிறகு வேண்டுமானால் விமர்சனம் என்ற அரசியல் நாகரிகம் அறியாமல், துக்க வீட்டில் வந்து நின்று, புகார் பட்டியல் வாசிப்பது நியாயமா?

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளும் மாநில தலைவர்!
தமிழ்நாடு பா.ஜ.க. என்ற கட்சி வளராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, அதன் இன்றைய தலைவர் – அரைவேக்காடு தலைவர் ஒருவருக்குக் கொடுக்கப் பட்டிருப்பதுபோல், அவரது அன்றாட முகாரி, அக்கட்சியை முக்காடு போட்டு மூலையில் முடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர, ஒருபோதும் அந்தக் கட்சியை வளர்க்க உதவி செய்யாது!
மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைப் பார்வையிட்ட ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட குழுவினர், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளை மனந்திறந்து பாராட்டிய நிலையில், இந்த அரைவேக்காடு தலைவர், ‘‘ஒன்றியக் குழுவினர் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறி, இவர் ‘கோயபெல்ஸ் அவதாரம்’ எடுக்கிறார்!

எதிர்க்கட்சிகள் மனிதநேயத்துடன் அணுகவேண்டிய தருணம் இது!
கலைஞர் ஒரு திரைப்படத்தில் வசனம் எழுதியிருப்பார், ‘‘மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பும்!” என்று. அது எவ்வளவு உண்மை என்பதை – இத்தகைய கருணை இல்லாத கடும் அரசியல் வியாதிகள் (‘‘அரசியல்வாதிகள்” அல்ல) யார் என்பதை இதன்மூலம் மக்கள் புரிந்துகொள்வார்கள்!
ஓடோடி வந்து உதவிட வேண்டிய தருணத்தில், ஒய்யாரமாக நின்று, நீட்டி முழக்குவது, நிந்தாஸ்துதி பாடுவது மகாமகா கேவலம் அல்லவா!
ஆளும் அரசுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகள் ‘லாலி’ பாடவேண்டாம்; போலிக் குற்றச்சாட்டுகளைக் கூறக் கூடாது அல்லவா!
‘‘800 பேர் கொண்ட ரயில் திருச்செந்தூரில் புறப் படுவதற்குமுன், ஏன் ஒன்றிய அரசு நிறுத்தியிருக்கக் கூடாது” என்று கேட்குமுன், அந்தப் பயணிகளைப் பத்திரமாக மீட்டு, பசியாற்றி, பாதுகாப்புத் தருவதே முன்னுரிமையாக இருக்கவேண்டும்; அதை விடுத்து, ஏன் ரயில் கிளம்பியது? என்று கேட்டு, தொலைக்காட்சியில் முகம் காட்டிப் பதிவு செய்கிறார்கள்.
இப்போது தேவை மனிதநேயமும், மக்கள் நலப் பாதுகாப்புமே! அதை முழு மூச்சுடன் புயல் வேகத்தில் செய்யும் தமிழ்நாடு அரசுக்குத் துணை நிற்பதே முன் முன்னுரிமை!
‘இருட்டைக் குறைகூறுவதைவிட முதல் பணி, ஒரு சிறு மெழுகுவத்தியைக் கொளுத்தி, சற்று வெளிச்சம் உண்டாக்குவதே முதல் பணியாக அமையட்டும்!’ என்பது ஒரு நல்ல ஆங்கிலப் பழமொழி!

அரசியல் செய்ய இது நேரமல்ல!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு அனுப்பப்பட, மேலும் கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என்று ஒன்றிய இராணுவத் துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ளது எதைக் காட்டுகிறது?
நிவாரணப் பொருள்கள் தயாராக இருக்கின்றன – கொண்டு சேர்க்கத் தடை உள்ள அளவு நிலைமை மோசமடைந்துள்ளது என்பதைத்தானே!
எனவே, அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் ‘மீன் பிடிக்கத் தூண்டிலைப் போடாமல்’, மக்களின் துயர் துடைக்க நேசக்கரம் நீட்டவேண்டும்!
அரசியல் செய்ய இதுவல்ல தருணம்!
‘பந்தலிலே பாவக்காய்’ பாட்டுதான் நம் நினைவிற்கு வருகிறது!
எனவே, உதவிட முன்வாருங்கள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
20.12.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *