50 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் இதே நாளில் (1973)தான் தனது இறுதி முழக்கத்தை முடித்துக் கொண்டார். அது மரண சாசனம் என்று யாருக்குமே தெரியாது.
அந்த முழு உரையையும் இப்பொழுது படித்தால்கூட, எந்த இலக்கை நோக்கி அந்த ஈரோட்டுச் சூரியன் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினாரோ, அதனுடைய நீட்சி அந்த உரையின் ஒவ்வொரு சொல்லிலும் சூளுரைத்துக் காணப்படுகிறது.
பிறப்பின் அடிப்படையில் நூற்றுக்கு 97 விழுக்காடாக இருக்கக் கூடிய நம்மின மக்கள் சூத்திரர்களாக இன்னும் இருக்கிறோமே – சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்ற இழிவைக்கூட உணராத மக்களாக நாம் இருக்கிறோமே –
நாம் கும்பிடும் கடவுளும் நாம் மதிக்கும் மதமும், நாம் கொண்டாடும் பண்டிகைகளும், நம்பும் சாஸ்திர, சம்பிரதாய இதிகாச புராணங்களும், பழக்க வழக்கங்களும் நம்மை இந்தப் பிறவி இழிவுத் தன்மையைக் கெட்டியாக நிலை நிறுத்துவ தற்காகத் தானே உண்டாக்கப்பட்டன.
இன்னும் சொல்லப் போனால், சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோமே, அந்த சுதந்திர நாட்டின் அரசியல் சட்டம் மதப் பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதியைத் தானே கெட்டியான பூட்டுப் போட்டுப் பாதுகாக்கிறது!
இதன் பொருள் என்ன? ஜாதி பாதுகாப்பு என்பது நம்மை சூத்திர ஜாதி – பார்ப்பன வைப்பாட்டி மக்கள் என்பதை வேறு சொற்களில் சொல்லுவதாகத் தானே அர்த்தம்!
தந்தை பெரியார் கடவுளை எதிர்த்ததும், மதத்திற்கு மரண அடி கொடுத்ததும் சாஸ்திரக் குப்பைகளையும், இதிகாசங்களைக் கசடுகளை கொளுத்தியதும், கடைசியாக அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தியதும் எல்லாமே நம்மைப் பிறவி இழிவுள்ள சூத்திர மக்களாக இருப்பதிலிருந்து மீட்டு மானமுள்ள மக்களாக ஆக்குவதற்காகத் தானே!
மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்ற நான்கே சொற்களில் தன் இலட்சியத்தை எடுத்துக் கூறி விட்டாரே!
திருக்குறளில்கூட ஏழு சொற்கள் உண்டு; ஆனால் தந்தை பெரியார் அதையும் தாண்டி நான்கே சொற்களில் – நச்சுத் தெறித்ததுபோல நறுக்கென்று வெளிப்படுத்தி விட்டாரே!
இன்னும் சொல்லப் போனால் இழிவுகளும், ஏற்றத் தாழ்வுகளும், உலகப் பந்தின் எந்த மூலையில் சிறிய அளவில் குடி கொண்டிருந்தாலும், கொலுவிருந்தாலும், அங்கெல்லாம் வாழும் மக்களுக்கும் இந்த நான்கு சொற்களும் நஞ்சு நீக்கும் மாமருந்தல்லவா.
“பெரியார் உலகமயம் – உலகமே பெரியார் மயம்!” என்று நமது தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் கூறி வருவது வெறும் அழகுச் சொல்லின் அணி வகுப்பல்ல – ஆக்கப் பூர்வமான மனிதத்துவத்துக்குத் தேவையான அருமருந்து!
விஞ்ஞானம் வளர்ந்து வரும் ஒரு கால கட்டத்தில், மனிதனின் ஆயுள் பெருக்கம் நீடித்துக் கொண்டு போகும் வளர்ச்சி ஒருபக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பிறக்கும் அளவுக்கு வளர்ச்சி வானோக்கி செல்லும் மாற்றம் ஏற்பட்டும்கூட, இன்னும் நாம் குழவிக் கல்லை முட்டிக் கொண்டு கிடக்கின்றோமே – இன்னும் சூத்திரன் என்னும் இழிவுச் சேற்றில் மூழ்கிக் கிடக்கின்றோமே என்ற கோபமும், கொந்தளிப்பும் தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தில் அவை மக்கள் காதுகளில் ஒலிக்கவில்லையா? சிந்தனையில் பொறி தட்டவில்லையா?
இவற்றை எல்லாம் எழுச்சியுடன் எடுத்துச் சொல்லுவதற்கு இனியொரு பெரியார் நமக்குக் கிடைப்பாரா? கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை அவர் முழங்கிச்
சென்ற மூச்சுக் காற்றை நாம் சுவாசிக்க வேண்டாமா?
நம்மை நாம் மனிதர்களாக்கிக் கொள்ள வேண்டாமா?
தந்தை பெரியார் விட்டுச் சென்ற கொள்கைகள், இலட்சியங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கு முழு வெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் ‘சூத்திரச்சி வீட்டு வேலைக்கு வந்துட்டாளா?” என்று இப்பொழுது கேட்க முடியுமா?
பெயருக்குப் பின்னொட்டாக ஜாதிவாலை ஒட்ட வைக்க வெட்கப்படும் நிலை ஏற்பட்டதே – அது யாருடைய அரும்பெரும் சாதனை!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை – இதுதான் தந்தை பெரியார் தம் நெடிய பொதுத் தொண்டின் வரலாற்றில் நின்ற இறுதிக்களம்; அதுகூட கடவுள் சம்பந்தப்பட்டதல்ல – பிறவிப் பேதமான ஜாதி ஒழிப்புப் போராட்டமே!
“தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!” என்று அன்னை மணியம்மையார் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (6.1.1974) எடுத்த உறுதி மொழியை எடை போட்டுப் பார்த்தால், பலவற்றைச் சாதித்து முடித்தே உள்ளோம்!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, இடஒதுக்கீட்டில் புதிய இலக்கு (தந்தை பெரியார் காலத்தில் 49 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீடு – இப்பொழுது தமிழ்நாட்டில் 69 விழுக்காடு) ஒன்றிய அரசு துறைகளில் இல்லாதிருந்த இடஒதுக்கீடு – மண்டல் குழுப் பரிந்துரையின் வழி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு (இதற்காகத் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42, மேற்கொண்ட போராட்டங்கள் 16) என்று கூறிக் கொண்டே போகலாம்.
தந்தை பெரியார் பிறந்த நாளை “சமூகநீதி நாளாக” “திராவிட மாடல் தி.மு.க. அரசு” அறிவித்து சமூகநீதிக்கான சமத்துவத்திற்கான உறுதிமொழியை எடுக்கச் செய்துள்ளது.
எந்த காங்கிரசிலிருந்து சமூகநீதிக்காக தந்தை பெரியார் வெளியேறினாரோ (1925) அதே காங்கிரசே சமூகநீதியைக் கையில் எடுத்துக் கொள்ளும் மாற்றம் – இன்றைய கால கட்டத்தில் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. இந்திய அரசியலே தந்தை பெரியாரின் சமூக நீதிப் புள்ளியில் மய்யம் கொண்டு விட்டதே! பெரியார் சிலையைப் பார்த்தால்கூட எதிரிகளுக்குக் குலை நடுக்கம் ஏற்படுகிறதே!
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு – அவர் போட்டுத் தந்த பாதையில் அவர் அடையாளம் காட்டியவர்களின் வழி நடத்திய – நடத்துகின்ற தகைசான்ற தன்மையால் திராவிட மண்ணை மற்ற மாநிலத்தவர்கள் திரும்பிப் பார்க்கும் நிலையை எண்ணிப் பெருமிதப்படுவோம்!
சென்னை தியாகராயர் நகரில் தனது இறுதி முழக்கத்தில் தந்தை பெரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“உங்கள் கடமை என்றால் உங்கள் ஒருவரைப் பொறுத்ததல்ல. தமிழர் என்று சொல்லுகிற நாம் இத்தனைக் கோடி மக்களையும் பொறுத்தது. பிறகு நாம் வட்டியும் முதலுமாய் உயரலாம் – ஒன்றும் தேங்கிப் போகாது – நம் நாட்டு முன்னேற்றம் என்று உங்களை வணக்கத்தோடு கேட்டுக் கொண்டு, இந்த ஏற்பாடு பண்ணி, இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்ததற்கெல்லாம் காது கொடுத்துக் கேட்டதற்கு என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு, என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்” என்றாரே! அது அவர் வாழ்வின் முடிவு என்று யாருக்குத் தெரியும்? ஆம் அதோடு, மக்களோடு மக்களாக வாழ்நாள் முழுவதும் தமது அறிவார்ந்த பேச்சின் மூலம் மக்களைச் செறிவூட்டிய அந்த உலகத் தலைவர் அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன் தன் உரையை முடித்துக் கொண்டு விட்டார்.
பேச்சுதான் முடிந்ததே தவிர, அவரைப் பற்றிய பேச்சு முடியவில்லை. நாள்தோறும் நாட்டு மக்கள் மத்தியில் கருத்தளவில் எழுச்சியாக நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்.
தந்தை பெரியார் பணி செய்து கிடப்பதே நம் கடமை என்று சூளுரைப்போம்!
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!!