காரைக்கால் மீனவர்கள் 14 பேர் சிறை பிடிப்பு
காரைக்கால், டிச. 18- காரைக்கால் பகுதியை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் அதே பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், இந்திய எல்லையான கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் நேற்று (17.12.2023) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 14 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விசைப் படகையும் பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் படகில் இருந்த மீன்கள் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகளையும் இலங்கை கடற்படையினர் பறித்துக் கொண்டனர். காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.