தொண்டை கரகரப்பு நீங்க…

viduthalai
2 Min Read

தொண்டை கரகரப்பு, சளி, தொண்டைக்கட்டு நீங்க மா இலையைச் சுட்டு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.
பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப்பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால், தொண்டைக்கட்டுக்கு இதமாக இருக்கும். குரல்வளம் பெருகும்.
நெல்லிக்காய்ச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொடர் விக்கலையும் விரட்டிவிடலாம்.

இஞ்சிச்சாறு, துளசிச்சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருவது இருக்காது.
சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்துப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட, தொண்டை கரகரப்பு குணமாகும்.
ஒரு நாளைக்கு 4 வேளை உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளித்து துப்பினால் தொற்று சரியாகும். வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து தொண்டையில் படும்படி கொப்பளித்து துப்ப வேண்டும்.

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது தேன் ஊற்றி, நன்றாக ஊறும்வரை வைத்து சாப்பிட்டு வர தொண்டைப் புண்கள் குறையும்.
மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குணமாகும். இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

தண்ணீரில் துளசி இலையை தினமும் போட்டுக் குடிக்கத் தொடர் இருமல் நீங்கும்.

சுடுதண்ணீரில் துளசி, கற்பூரவல்லி இலை, நொச்சி இலை என ஏதாவது ஒன்றைப் போட்டு ஆவி பிடிக்க சளி, தலைபாரம், தலைவலி குணமாகும்.
விளாம் மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இரைப்பு, வாய்க் கசப்பு நீங்கும்.
புதினாவில் மெந்தோல் சத்து அதிகமாக இருப்பதால், கட்டியிருக்கும் சளியை கரைத்து வெளியே தள்ளும் தன்மை இதற்கு உண்டு. இதனால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
வெந்தயம் தொண்டைத் தொற்றுக்கு சிறந்த நிவாரணியாகும். வெந்தயத்தை ஊறவைத்து மென்று சாப்பிடலாம். உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் அருந்த தொண்டைக்கு இதமாக இருக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *