புரிந்து கொள்ளுங்கள்!

Viduthalai
3 Min Read

ஆயுதபூஜை – சரஸ்வதி பூஜை     

– அறிஞர் அண்ணா

கட்டுரை, மற்றவை

அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தி யாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்க ளெல்லாம் ஆயுதபூசை செய்தவர்களல்லார் – நவ ராத்திரி கொண்டாடினவர்களல்லர்.

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை – கற்பூரம் கூட நீ செய்ததில்லை. கடவுள் படங்களுக்கு அலங் காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறி யாதவன் கொடுத்துதான் – நீ கொண்டாடு கிறாய்.

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ் வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம். உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல் யோசி, உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்த பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டு பிடித்திருக்கக் கூடாதா? இல்லையே! மேனாட் டான் கண்டு பிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய; அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டன் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப் படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப்பார்.

சரஸ்வதி பூசை – விமரிசையாக நடை பெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் – தந்தி முறை – அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவை களெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம். அனுப விக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள் சரஸ்வதி பூசை; ஆயுத பூஜை, செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். 

ரேடியோவில் இராக வனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும்,  பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா? பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரஸ்வதி பூசை; ஆயுத பூசை நமக்குப் பலன் தர வில்லையே, அந்தப் பூசைகள் செய்தறி யாதவர், நாம் ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார் களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதை யும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப்பார் – அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

நன்றி: ‘திராவிட நாடு’ – 26.10.1947

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *