மனிதன் மாறவில்லை!

viduthalai
4 Min Read

திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் இஸ்லாமியர்களின் பொது அடக்க ஸ்தலத்தை சுன்னத்வால் ஜமாத் நிர்வகித்து வருகிறது.
இங்கு தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுவர்களுக்கு தனி அடக்க ஸ்தலம் இருந்தது. அந்த அடக்க ஸ்தலம் குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இதையடுத்து, தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுபவர்களில் யாராவது இறந்தால், அவர்களின் உடல்களை சுன்னத்வால் ஜமாத் பராமரிப்பில் உள்ள அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் ஜாதி, மதம் கடந்து உடல்களை அடக்கம் செய்ய பொது மயானம் இல்லாதது கெட்ட வாய்ப்பானது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக அடக்க ஸ்தலங்கள் உள்ளன. இந்துக்களில் எஸ்.சி.க்கு தனியாகவும், பிற ஜாதியினருக்கு தனியாகவும் மயானங்கள் உள்ளன. பிற மதங்களிலும் இந்த பாகுபாடு உள்ளது. இறப்பவர்களின் உடல்களை உரிய நேரத்தில் அடக்கம் செய்யாவிடாமல் தடுப்பதால் சடலத்தின் கண்ணியம் பாதிக்கப்படும், சுகாதார பாதிப்பும் ஏற்படும்.
இறப்பவர்களின் உடல்களை உரிய பழக்க வழக்கப்படி அடக்கம் செய்யாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினர் அடையும் மன உளைச்சலை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இறந்தவரின் உடல் 24 மணி நேரத்தில் அழுகத் தொடங்கும். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது மரணத்தை விட சோகமானது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்.

இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், கிராம மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. அனைவரையும் சமமாக கருதி இறப்பவர்களின் உடல்கள் நம்பிக்கை மற்றும் பழக்க வழக் கத்தை பின்பற்றி அடக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வர வேண்டும். இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும். இனிமேல் எந்த குடும்பங்களும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டாமல் இருப்பதை வக்பு போர்டு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி வேதனையோடு தெரிவித்துள்ள கருத்தை பகுத்தறிவு உணர்வோடு ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எந்த நாட்டில் பிறந்தாலும், மனிதன் மனிதனே! பிறப்பிலும் சரி, இறப்பிலும் சரி மனிதனைப் பிளவுபடுத்திப் பிரித்துப் பார்ப்பதில் ஏதாவது பொருள் இருக்கிறதா?
மனிதனைப் பிளப்பதும், பிரிப்பதும் மதமாக இருந்தால், அந்த மதத்தைப் பற்றி மனிதன் சிந்திக்க வேண்டும்.
ஒரே மதத்துக்குள்ளேயே ஜாதிவாரியான மயானங்கள் என்பது எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கது தானா?
கடவுளோ மதமோ மனிதன் எந்தக் கால கட்டத்திலேயோ உரு வாக்கிக் கொண்ட ஒன்று. அதிலும் இடை இடையே மாற்றங்களும், பிளவுகளும் நடந்துதான் இருக்கின்றன.

ஒரு மதத்திலோ, ஒரு ஜாதியிலோ பிறந்து மரணித்தவனை குறிப்பிட்ட அந்த ஜாதி, மதத்துக்கு சொந்தமானது என்று சொல்லப் படும் மயானத்தில் புதைக்காமல், எரிக்காமல் வேறு இடத்தில் புதைத் தாலோ, எரித்தாலோ, இறந்த மனிதன் எழுந்து வந்து விடுவானா?
என்ன பேதமை! சாவிலும் கூட மதம், ஜாதி என்பது, மனிதன் இன்னும் பக்குவப்படவில்லை என்பதற்கு அப்பட்டமான அடை யாளமே!
ஒரு காலம் இருந்ததுண்டு, உணவு விடுதிகளில் எல்லா மனிதர்களும் உட்கார்ந்து சாப்பிட முடியாது – கூடாது என்ற நிலை இருந்ததுண்டு; பொது வீதிகளிலும் சாலைகளிலும்கூட நடக்கும் உரிமையில்கூட பிரச்சினை இருந்ததுண்டு.

குளம், கிணறு, ஆறுகளில் புழங்குவது கூடப் பிரச்சினை இருந்ததுண்டு.
பெண்கள் மார்புச் சேலை அணிவதில் கூடப் பிரச்சினை இருந்ததுண்டு. அவற்றில் எல்லாம் மாற்றம் ஏற்பட்டதில்லையா? “மாற்றம் ஒன்றே தான் மாறாதது” என்ற அறிவியல் சிந்தனை மனித மூளையில் எட்டுவது எப்போது? பக்குவப்படுவது எப்போது?
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனபின்பும், ஜாதி, மதம் கடந்து பொது மயானம் இல்லாதது ஏன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பி. புகழேந்தி எழுப்பிய கேள்வி ஒவ்வொருவரின் பொட்டில் அறைந்தது போல் இருக்கிறதா, இல்லையா?
சுதந்திரம் என்பது மண்ணுக்கு மட்டும்தானா? மனிதன் மண்டை மூளைக்குள்ளும் அது இருக்க வேண்டாமா?
தந்தை பெரியார் ஒரு வினாவை எழுப்பினாரே – ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்க முடியுமா? என்று கேட்டாரே – அந்தக் கேள்விக்கு இதுவரை பதில் உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டம் மதப் பாதுகாப்பு என்ற பிரிவில் (25, 26) ஜாதியைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறதே!
அதற்காகத்தானே ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதியை எரிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்து நடத்தினார். (26.11.1957).
இந்திய அரசாங்கம் என்ன செய்தது? இந்த நியாயமான மனித சுதந்திரக் குரலை ஏற்றுப் பரிசீலித்ததா? மாறாக ஜாதியைப் பாதுகாக் கும் அரசமைப்புச் சட்டப் பகுதியைத் தீயிட்டால் 3 ஆண்டு வரை தண்டனை என்றல்லவா சட்டம் செய்ய தமிழ்நாடு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனாலும் அதற்காக அஞ்சாமல் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் சட்டத்தை எரித்தனரே – சிறையில் பலரும் மாண்டனரே, கர்ப்பிணியாகச் சென்று, சிறையில் குழந்தைகளை ஈன்ற பெண்களும் உண்டே!

தந்தை பெரியார் 1957இல் எழுப்பிய வினாவை நோக்கி உயர்நீதிமன்றத்திலிருந்து ஒரு குரல் ஓரளவு நகர்ந்திருக்கிறது என்பது வரவேற்கத்தக்கதே! அதில் “நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கத்தைப் பின்பற்றி” என்பது இடிக்கிறதே!
பொது மயானம் என்ற நீதிபதியின் பொதுவான கருத்து. மக்கள் கருத்தாக மலரும் நாளே, நாம் மனிதராகி விட்டோம் என்பதற்கான அடையாளமாகும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *