சென்னை, டிச.9 – யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் பணிகளில் 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அய்ஏஎஸ், அய்பிஎஸ் உட்பட 26 விதமான உயர் பதவிகளில் உள்ள 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரியில் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு மே 28ஆம் தேதி நடை பெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். இதில் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு 14,624 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்தனர். முதன்மை தேர்வு செப்டம்பர் 15 முதல் 24ஆம் தேதி வரை நடத்தப் பட்டது. இதில் வெற்றி பெற்ற 2,844 பட்டதாரிகளின் விவரப் பட்டியலை யுபிஎஸ்சி இணையதளத்தில் (www.upsc.gov.in) நேற்றிரவு (8.12.2023) வெளியிட்டது.
இதுதவிர நீதிமன்ற வழக்குகளால் 28 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் யுபிஎஸ்சி தெரிவித் துள்ளது. முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 132 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தொடர்ந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். நேர்முகத் தேர்வு டில்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் அடுத்த மாதம் நடைபெறும். இதற்கான அட்டவணை – கூடுதல் தகவல்கள் யுபிஎஸ்சி வலைதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.