தமிழர் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து

Viduthalai
1 Min Read

  – புலவர் சு. கந்தசாமி

ஞாயிறு மலர்

அய்யா பெரியார் இருக்கின்றார்

   ஆசிரியர் உருவில் உழைக்கின்றார்

கய்யைக் கட்டி வாயைமூடி

   கண்டோர் காலில் வீழ்வோரின்

செய்கை எல்லாம் சீரழிய

   சிந்தை வளத்தைப் பெருக்குகின்ற

வய்யம் புகழும் பகுத்தறிவை

   வாய்ப்பாய் உரைத்து வருகின்றார்!

தொன்னூற் றையே தாண்டியுந்தான்

   தொடர்ந்து ழைக்கும் தூயவராய்

இன்னல் கொடுக்கும் ‘நீட்’டினையும்

   இல்லா தொழிக்கப் பாய்கின்றார்

மண்ணில் அழிந்த மொழியினையே

   மலையாய் வளர்க்கும் நிலையொழிக்க

எண்ணி இளைஞர் துணையுடனே

   இயங்கும் பெரியார் ஆகின்றார்!

உரிமை முழக்கம் தொடர்கின்றார்

   உண்மை விடுதலை விடுக்கின்றார்

பெருமை குறைக்கும் மூடத்தைப்

   பெருகா திருக்க மொழிகின்றார்

அறிவைப் பெருக்கும் வழியினிலே

   ஆய்ந்து ரைத்தே வருகின்றார்

பெரியார் இருப்பைக் காட்டுகின்ற

   பெரியார் இவரே வாழ்த்திடுவோம்!

மாநில உரிமை மீட்கின்ற

   மனத்தைக் கொண்டு முழங்குகின்றார்

தேனீ போலச் சுறுசுறுப்பாய்த்

   திசைகள் எட்டும் ஒலிக்கின்றார்

வானினும் உயர்ந்த தன்மானம்

   வாகை சூடும் நிலைமையிலே

ஊனையும் மறந்தே உழைக்கின்றார்

    உலகம் புகழ வாழியவே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *