நீட் தேர்வு : சட்டப்பேரவையில் காரசார விவாதம்
சென்னை, ஜன.12– நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப் பேரவையில் நேற்று (11.1.2023) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
கே.பி.முனுசாமி (அதிமுக): முதலமைச் சராக பழனிசாமி இருந்தபோது, நீட் தேர்வு காரணத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக ளுக்கு செல்ல முடியாது என்ற நிலையை உணர்ந்தவுடன், உள்ஒதுக்கீட்டாக 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தார். தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமிதான் முழு காரணம்.
அமைச்சர் பொன்முடி: கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ் நாட்டில் நீட் தேர்வு நுழையவிடாமல் தடுத்தார். பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வே வரக்கூடாது என்று 2009இல் சட்டம் போட்டார். தாழ்த்தப்படவர்களுக்கு இடஒதுக் கீட்டை 2 விழுக்காடு அதிகரித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நீட் தேர்வு எப்போது வந்தது என்று நாட்டுக்கே தெரியும். அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களுடன் கூட்டணியில் யார் இருந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வு 2010இல் வந்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. அவர்களுடன் கூட்டணியில் இருந்தது திமுக.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் வரவில்லை. யாரு டைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட் டுக்குள் நீட் தேர்வு நுழைந்தது என்பதே முக்கியம். நீங்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ் நாட்டுக்குள் நுழைந்தது.
பழனிசாமி: நீட் தேர்வு கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. 2010இல் நீட் தேர்வு வந்தபோது, காங்கிரஸ் ஆட்சி. அவர்க ளுடன் கூட்டணி திமுக. அப்போது, திமுகவை சேர்ந்தவர்தான் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார் என்பதை மறக்க வேண்டாம்.
முதலமைச்சர்: நாங்கள் அமைச்சர வையில் இருந்தபோதுகூட நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. அது எங்களை மீறிதான் வந்தது. எங்களை மீறிதான் நிறைவேற்றப் பட்டது. கலைஞர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் நுழையவிட வில்லை. ஏன் உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
பழனிசாமி: நீட் தேர்வு தமிழகத்துக்கு வந்ததற்கு காரணம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருக்க முடியுமா?
அமைச்சர் இ.பெரியசாமி: தமிழ் நாட்டில் நுழைவுத் தேர்வை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றவர் கலைஞர்.
பழனிசாமி: நீட் தேர்வை எதிர்த்து நாங்களும் வழக்கு தொடர்ந்தோம். இன்றைக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்க கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
தமிழ்நாட் டில் நீட் தேர்வு நுழைந்ததற்கு காங்கிரஸ் -_ திமுகதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்கள்தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
முதலமைச்சர்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது நீட் தேர்வுக்கான வரைமுறை கொண்டு வரப்பட்டது. அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
அதனால்தான் தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு நுழைய முடியவில்லை. உங்களுடைய கூட்டணி கட்சியான பாஜக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது.
கலைஞர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை நீட் தேர்வை நுழையவிடவில்லை. ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.