டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா

Viduthalai
3 Min Read

சென்னை, ஜன.13- சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று (12.1.2023) நடைபெற்ற தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

மேலும், மாணவிகள் நிகழ்த்திய கோலாட்டம், கும்மி யாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தன. பெரிய பானையில் பொங்கல் பொங்கி வருவதைக் கண்ட மாணவியர் அனைவரும் சேர்ந்து ”பொங்கலோ பொங்கல்” என்று விண்ணைப் பிளக்கும் வகையில் உற்சாக ஒலி எழுப்பினர். பொங்கல் விழா என்பது நல்ல விளைச்சலுக்காகவும், அறுவடைக்காகவும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விழா என்பதை நினை வூட்டுவதாக இக்காட்சி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.         

“தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேகமாக மாறிவரும் இவ்வுலகில், நம்முடைய மதிப்பு மிகுந்த மரபையும், விழுமியங்களையும் நாம் மறக்காமல் இருப்பது முக்கியம். அந்த வகையில் நம்முடைய பண்பாட்டின் வளத்தினையும், பெருமையையும் நம்முடைய இளைய சமுதாயம் உணர்ந்து, அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு இவ்வாறான விழாக்கள் பெரிதும் உதவும் என்று டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். மணிமேகலை தெரிவித்தார்.

தமிழர்திருநாள் பொங்கல் விழா அறுசுவை உணவுகள் அறிமுகம் 

சென்னை, ஜன. 13- தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின்போது பாரம்பரிய சுவை மிகுந்த உணவு மற்றும் மகிழ்ச்சி நிரம்பி வழிவதை உறுதி செய்யும் வகையில் ஆனந்தம் பொங்குவதைப் பரவலாக்குகிறது கீதம் வெஜ் ரெஸ்டாரண்ட் உணவகம். அறுசுவை உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து இந்நிறுவனர் முரளி என். பட் கூறுகையில்: “எங்களது பொங்கல் சலுகைகளை, நம்உணவுக்காக வயல்களில் கடினமாக உழைக்கும் விவசாயிகளைக் கவுரவிப்பதற்கான ஒரு விழாவாகக்கருதுகிறோம். இதுவே அவர்களுக்கு நாம் நன்றிசெலுத்தும் வழி.  

‘பொங்கலோ பொங்கல்’ திருவிழா காலை உணவு விருந்து ஆரோக்கியமான மற்றும் சுவையான உள்நாட்டு இந்திய தானியங்களுக்கு ஒரு ஆதாரமாகஇருக்கும். ‘முன்னாட்டு அறுசுவை விருந்து’ என்பது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பாரம்பரிய உணவு வகைகள்நிறைந்தசுவையான மதிய உணவாகும். அவற் றில் பல, நவீன காலத்தில் மறக்கப்பட்டுவிட்டன. இது ஒரு வளமான விருந்து மட்டுமல்ல, நம் முன்னோர்கள் அனுப வித்த உணவுகளை மீண்டும் உருவாக்கித் தருகிறோம். இந்த பொங்கல் சலுகைகள் 14 ஜனவரி முதல் 17 ஜனவரி 2023 வரை கிடைக்கும்” என்றார்.

விலகியது வடகிழக்கு பருவமழை 

சென்னை, ஜன 13தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை: 

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து  (ஜன.12) விலகியது. 12 மற்றும் 13ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. 14-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *