உழவர் திருநாள்

1 Min Read

மற்றவை

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்

விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்

முழவு முழங்கிற்றுப் புதுநெல் அறுத்து

வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல்பவர் என்ற சொல்லிற்

பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் ”நாங்கள்

உழவரே” என்றுவிழ ஒப்பி மகிழ்ந்தாரே!

உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஒட்டிவந்த

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்

கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று

செய்ய தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே!

தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்

ஓரிழுப்புநோய் — பொதுவின் உள்ளவிழைவே விழா!

ஏரெழுப்பும் புத்தம், புதுச்செல்வம் இட்ட பால்

பாரழைக்கப் பொங்கற் பயன் மணக்கவைத்தனரே!

அழகின் பரிதி உயிர்; அவ் உயிரை

முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து

மழை! உலகுதாய்! வளர்ப்புப் பாலே பயன்! நெய்

ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!

ஆடை எல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!

ஓடை எனப் பாலும், உயர் குன்றரிசியும்

வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட

நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!

இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்

புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுகஉண்ட

மகிழ்ச்சியே இந்நாள் போல எந்நாளும் மல்க

மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!

– பாவேந்தர் பாரதிதாசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *