திருச்சி, ஜன.20 இணையதள விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் பொறியியல் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் நக்க சேலம் அரவிந்தா நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பால குமார் (வயது 18). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பாலகுமார் எந்நேரமும் அலைபேசியில் ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இதனை பார்த்த அவரது தாய் அம்பிகா அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாலகுமார் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாத்தா வெள்ளையன் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் பாலகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஆன்லைனில் விளையாடியதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால் தூக்குப் போட்டுக் கொண்ட பாலகுமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.