மதுரை, ஜன. 25- மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரின் இதயத்தை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மரணம் அடைந்தவரிடம் இருந்து அறுவை சிகிச்சை வழியாக இதயம் எடுக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.இதனைத் தொடர்ந்து, சென்னை காவல் துறையின் உதவியுடன், விமான நிலையத்தில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கிரீன் காரிடர் அமைக்கப்பட்டு இதயம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 2 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு இதயம் கொண்டு வரப்பட்டது
கிரீன் காரிடர்: ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சாலை வழியாக உடல் உறுப்புகளை கொண்டு செல்ல பயன்படுத்தும் முறை தான் கிரீன் காரிடர். இதன்படி உடல் உறுப்புகள் செல்லும் வழியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு தடை இல்லாத நிலையை ஏற்படுத்தி கொடுப்பது தான் கிரீன் காரிடர் என்று அழைக்கப்படுகிறது