ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக இரண்டு அணிகளும் வேட்பாளர்கள் அறிவிப்பு பிஜேபியின் பரிதாப நிலை

Viduthalai
2 Min Read

 ஈரோடு,பிப்.2 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியும், மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வமும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதில், ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட் டுள்ளனர்.

பாமக, சமக ஆகியவை போட்டியிட வில்லை.முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, தனது கூட்டணி கட்சிகளான தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்ற நிலையில், பாஜகவின் ஆதரவையும் கோரி இருந்தது. பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் தாமதித்து வந்தது. இந்த நிலையில், அதிமுக வேட்பாளராக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு போட்டியிடுவதாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று (1.2.2023) காலை   அறிவித்தார். கட்சியின் ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, இடைத்தேர்தலில்அதிமுக வேட்பாளராக  கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்படுகிறார்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அதிமுகவில் தனி அணியாக செயல்படும் மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நேற்று மாலை அறிவித்தார். தனது ஆதரவாளரான செந்தில் முருகன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ், ‘‘அதிமுக சார்பில் வேட்பாளராக செந்தில் முருகனை நிறுத்துகிறோம். இவர் பதவியில் இல்லாவிட்டாலும் கட்சியின் விசுவாச தொண்டர். உறுதியாக, சசிகலாவை நேரில் சந்தித்து எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கேட்போம். பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்தி, ஆதரவு கேட்டால், எங்கள் வேட்பாளரை திரும்பப் பெறுவோம். நிலைப்பாடு குறித்து விரைவாக தெரிவிக்குமாறு, தேசியக் கட்சியான பாஜகவை நிர்ப்பந்திக்க முடியாது. இரட்டை இலை சின்னம் முடங்க ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். இபிஎஸ் நிறுத்தும் பொது வேட்பாளருக்கு ஏ, பி படிவங்களில் கையெழுத்திடுமாறு கேட்டால், கட்டாயம் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன்’’ என்றார். மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் உடன் இருந் தனர். இபிஎஸ், ஒபிஎஸ் ஒரே நாளில் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்திருப்பது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் இரட்டை இலை சின்னத்தை கேட்கக்கூடும். இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு இபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலை யில், அதுதொடர்பாக தேர்தல் ஆணையமும், ஒபிஎஸ் ஸும் பிப்.3-ஆம் தேதிக்குள் (நாளை) பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது நாளை தெரிந்து விடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *