ஓமாந்தூரார்

Viduthalai
2 Min Read

‘வரலாறு படியுங்க உதய நிதி!’ என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது ‘தினமலர்’, (12.2.2023). இதோ அது:

”ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார், முதல்வராக இருந்த கால கட்டத்தில், ஒருமுறை அவரது காரானது ஒரு வழிப்பாதையில் செல்ல நேரிட்டது. அப்போது, அந்தப் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், காரை வழிமறித்து, ‘இது, ஒரு வழிப்பாதை; இந்த வழியாகச் செல்ல அனுமதியில்லை’ என்று கூறியுள்ளார்.

உடன் ஓமந்தூரார், ‘நான் யார் தெரியுமா?’ என்று கேட்க, ‘தெரியும் சார்… சட்டம் அனை வருக்கும் சமமானது’ என பதில் அளித்துள்ளார், அந்தக் காவலர்.

ஓமந்தூரார் இடத்தில், திராவிட கட்சிகளின் முதல்வர்கள் இருந்திருந்தால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் கதி என்னவாகியிருக்கும் என்று, கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், ஓமந்தூரார், அந்தக் காவலரை மறுநாளே நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், பதவி உயர்வும் வழங்கினார். இப்படிப்பட்ட அற்புதமான தலைவர்கள் ஆண்ட தமிழகம்தான், இன்று தரமற்ற அரசியல்வாதிகளின் கையில் சிக்கித் தவிக்கிறது.

அரசியலில் புதிதாக நுழைந் திருக்கும் உதயநிதி போன்ற வர்கள் ஓமந்தூரார், காமராஜர் போன்ற அப்பழுக்கற்ற தலைவர் களின் அரசியல் வரலாற்றை கொஞ்சமாவது படித்துப் பார்க்க வேண்டும்.”என்பதுதான் ‘தின மலரில்’ வெளிவந்துள்ள கடிதம்.

ஒழுக்க சீலர் ஓமாந்தூரார் என்ற அடைமொழிகூட உண்டு.

ஓமாந்தூரார்பற்றி இது மட்டும்தான் தெரியுமா? ‘சேரன்மாதேவி, சேரன் மாதேவி போராட்டம்’ என்று சொல்கிறோமே, அந்தப் போராட்டம் தொடங்கப்படு வதற்கே காரணம் ஒரு வகையில் அந்த ஓமாந்தூரார்தான்.

காங்கிரஸ் பெயரால், மக்க ளின் நன்கொடையோடு நடத் தப்பட்டதுதான் சேரன்மாதேவி குருகுலம். இதன் நிர்வாகி வ.வே.சு.அய்யர். அந்தக் குரு குலத்தில் பார்ப்பன மாணவர் களுக்குத் தனியாகவும், சிறப் பாகவும் உணவு ஏற்பாடு! பார்ப்பனர் அல்லாத மாணவர் களுக்கு வேறு இடம்; வேறு வகையான உணவு.

அந்த குருகுலத்தில் பயின்று விடுமுறைக்கு ஊர் வந்த ஓமாந்தூரார் மகன் தன் தந்தையிடம் இந்த பாராபட்சத் தையும் சொல்ல ‘இதை நயினா விடம்’ போய்ச் சொல்லச் சொல்லி யிருக்கிறார். நயினா என்றால் வேறு யாருமில்லை, அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்த தந்தை பெரியார்தான்!

இதுபோன்ற பாரபட்சத்தை தந்தை பெரியார் விடுவாரா? போர்க்கொடி தூக்கினார். தமிழ் நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீப்பொறி பறந்தது. பெரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜூலு நாயுடு, எஸ்.இராமநாதன், என்.தண்டபாணி பிள்ளை இவர்கள் எல்லாம் ஓர் அணி; ராஜாஜி, என்.எஸ்.வரதராச்சாரி, கே.சந்தானம், சாமிநாத சாஸ்திரி போன்ற பார்ப்பனர்கள் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து வெளியேறினர் என்ற வரலாறு தெரியாமல் கடைசியில் குருகுலம் இழுத்து மூடப்பட்டது என்ற சரித்திரம் சங்கி ‘தினமலர்’ கூட்டம் அறியுமா?

ஓமாந்தூரார் முதலமைச்ச ராக இருந்தபோது, ”இவரு தாடியில்லாத ராமசாமி நாயக்கர்” என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்ததுண்டே!

காந்தியார் அழைத்துக் கேட்டபோது, புள்ளி விவரங்களு டன் பார்ப்பனர்கள் கல்வி, உத் தியோகங்களில் ஆதிக்கம் செலுத்துவதை விளக்கிக் கூறியதுண்டே!

காந்தியாரிடம் மறுபடியும் பார்ப்பனர்கள் சென்றபோது, ‘வேதம் படிக்கவேண்டிய உங் களின் கைகளில் ஸ்டெதாஸ் கோப்பும், டி-ஸ்கொயரும் ஏன்?’ என்று முகத்தில் அறைந்ததுபோல் சொன்னாரே! விளைவு காந்தியார் தீர்த்துக் கட்டப்பட்டார்!

உதயநிதிக்கு வரலாறு தெரியுமா? என்று கேட்கும் ‘தினமலரே’ – இதற்குப் பதில் சொல் பார்க்கலாம்!

 –  மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *