திருச்சி, பிப். 21- திருச்சி மாவட்டம், பட்டவெளி கிராமத்தில் சிவராத்திரி விழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
திருச்சி மாவட்டம், துப்பாக்கி தொழிற்சாலையின் பின்புறம் பட்டவெளி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னிஸ்வரர் கோயிலில் 18.2.2023 அன்று நள்ளிரவு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக் கானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட பக்தர்கள் பலருக்கு 19.2.2023 இரவு வாந்தி – பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பூலாங்குடியைச் சேர்ந்த சிலர் நவல்பட்டு பர்மா காலனி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியர் கள் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுத் திரும்பினர். சிலர் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பக்தர்கள் சாப்பிட்ட உணவு ஒவ்வாமை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த நவல்பட்டு காவல் துறையினர், சுகாதாரத் துறையினரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்றார்.