சென்னை, பிப்.25- சுய முன்னேற்ற எழுத்தாளர் இராம்குமார் சிங்காரம் எழுதிய “நீங்கள் ஏன் இன்னும் கோடீஸ்வரர் ஆகவில்லை?” என்ற தன்முனைப்பு நூலுக்கு, தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் 21.2.2023 அன்று சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.அய்.இ.டி. மகளிர் கல்லூரியில் நடந்த உலகத் தாய்மொழி நாள் விழாவில், இந்த விருதினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலர் மரு. இரா. செல்வராசு வழங்கினார்.
இந்நூலைப் பதிப்பித்த “தாய் பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெடிற்கு” சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் இரா. சந்திரசேகரன், எஸ்.அய்.இ.டி. மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியருமான முனைவர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.