தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது வழக்கு

Viduthalai
1 Min Read

சென்னை, பிப். 25- தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் ஆகிய 6 மீனவர்களும் கடந்த 21ஆம் தேதி இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

22.2.2023 அன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், தரங்கம்பாடி மீனவர்களை இரும்பு பைப்பால் தாக்கி அவர்களிடம் இருந்து ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, தூண்டில் ஆகியவற்றை பறித்து சென்றனர். இந்த தாக்குதலில் 6 மீனவர்களும் காயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து காயம் அடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். இதையடுத்து மீனவர்கள் மயிலாடு துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர், தரங்கம்பாடி மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது மிரட்டல், கொள்ளை, தாக்குதல் நடத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *