ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு: கழகத் தலைவரின் கருத்து- ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்து!

Viduthalai
1 Min Read

அரசியல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி யின் வேட்பாளரான நண்பர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்பைவிட, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டது –  உண்மையாகிவரும் நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர் அவர்களுக்கும், அவரது வெற்றிக்கு மூலகாரணமான பரப்புரை செய்த தி.மு.க. கூட்டணித் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சரும், சமூகநீதிக்கான சரித்திர நாயகருமான மு.க.ஸ்டாலின் அவர் களுக்கும், வெற்றிக்கு உழைத்த அமைச்சர்கள், அனைத்துக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், தோழர்களுக்கும், வெற்றி வாய்ப்பைத் தந்த ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களைத் தொலைப் பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தோம்.

இந்த வெற்றி அ.தி.மு.க.வினருக்கும்,  எதிர்க்கட்சித் தலைவருக்கும் பாடம் புகட்டுவதாக அமையும் வெற்றியாகும்.

1. தரக்குறைவான தேர்தல் பரப்புரைகளை இனிமேலாவது பேசாமல் கண்ணியத்துடன், கருத்தியல் வாதம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

2. பா.ஜ.க. ஏற்கெனவே ஓர் அணியை விழுங்கி விட்டது; மற்றொரு அணியையும் அடமானப் பொருளாகவோ அல்லது வாடகைக் குதிரையாகவோ பயன்படுத்தி, அந்த இடத்தினைத் தாங்கள் அடைய நினைக்கும் காவிக் கட்சியின் சூழ்ச்சி வியூகங்கள் அம்பலமானது காலத்தின் கட்டாயமே!

3. கொங்கு மண்டலம் தங்களுடைய கட்சிக் கோட்டை என்று கூறியது மாறி, தி.மு.க.விற்குத் தங்கு மண்டலம் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் உலகுக்குப் பறைசாற்றுகின்றன!

இதே வேகத்தில் கொள்கைக் கூட்டணி தனது பயணத்தைத் தொடரட்டும், வாழ்த்துகள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

2.3.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *