வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் : அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

Viduthalai
1 Min Read

சென்னை நவ.3 வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் தலைமையிலான ஆலோசனை  கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது

 இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், நேற்று (2.11.2023)அமைச்சர்கள் சாமிநாதன், கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

அதில், தமிழ் வளர்ச்சி துறை செயலர் செல்வராஜ், ”வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கும் போதும், புதுப்பிக்கும் போதும், தமிழில் பெயர்ப்பலகை உள்ளதா என்பதை உறுதி செய்து வழங்கினால், பிரச்னைகளை களையலாம்,” என்றார். அதற்கு, தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், ”தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு, 50 ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத்தை திருத்த அரசாணை வெளியிடப்பட்டது. 2,000 ரூபாயாக அபராதத் தொகையை உயர்த்தும் வகையில், அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது,” என்றார். 

இதையடுத்து பேசிய, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், ”அடுத்த மாதம், 21 முதல் 27ஆம் தேதி வரை, தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரமாக கடைப்பிடித்து, விழிப்புணர்வு கூட்டங்கள், பேரணிகள் நடத்தி, வணிகர் களுக்கு, உயர்த்தப்பட்ட அபராதம் குறித்து தெரிவிக்க வேண்டும்,” என, உத்தரவிட்டார். தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *