மதுரை,மார்ச்7- தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதை பெற்ற மாற்று திறனாளி வீராங்கனை தீபா விற்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) பூப்பந்து மற்றும் தடகள போட்டிகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்ற பெருமைக் குரியவர். வறுமையின் பிடியில் சிக்கி யுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதையும் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பணி வழங் காமல் முந்தைய அதிமுக அரசு அலைக்கழித்ததாக செய்தி வெளி யானது.
தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தீபாவிற்கு பகுதி நேர பாராதடகள பயிற்சியாளர் பணி ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவித்துள்ளார். மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் தீபாவிற்கு பணி வழங்கப் பட்டுள்ளது.