விழுப்புரத்தில் கோயில் பூசாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து பக்தர்கள் நேற்று (18.8.2026) மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மார்க்கெட் பகுதி, பாகர்ஷா வீதியில் அமைந்துள்ளது சிறீரேணுகாம்பாள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இக் கோயிலில் கண்ணன் (65) என்பவர் பூசாரியாக வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (17.8.2026) இவர் கோயிலில் வழக்கமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் பூசாரி கண்ணனிடம் வீண் தகராறு செய்து, தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள் கோயில் திறக்காமல் இருப்பதைக் கண்டு, விசாரித்ததில் பூசாரி தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோயில் முன் அமர்ந்து பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோயில் பூசாரியைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
