சென்னை, மார்ச் 9 தமிழ்நாட்டின் 2023-2024-ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடுகிறது
சட்டப்பேரவையில் வரும் 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் மார்ச் 20-ஆம் தேதி தாக்கல் செய்கிறார். 21-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்குழு முடி வெடுத்து அறிவிக்கும்.
தமிழ்நாடு பொது பட்ஜெட்டை பொறுத்த வரை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இது மட்டுமின்றி, மாண வர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கும் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கப் பட உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவை இன்று (மார்ச் 9) மாலை 5 மணிக்கு கூடுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உரிமைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களுக்கான விரிவாக்கத்துக்கு நிதி ஒப்புதல் மற்றும் தனியார் தொழில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.