‘கருணை அடிப்படையிலான வேலை திருமணமான மகளுக்கும் உண்டு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Viduthalai
1 Min Read

 சென்னை, மார்ச் 9- கருணை அடிப்படையிலான வேலையை பெற திருமணமான மகள்களுக்கும் உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண் ஒருவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக்கோரி அவரது மகள் சரஸ்வதி, அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் விண்ணப்பித்தார்.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு பின் விண்ணப் பித்துள்ளதாக கூறி, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துள்ள போதும், திருமணமானவர் என்ப தால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிமையில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் திலகவதி அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அவர்களின் தீர்ப்பில் சத்துணவுத் திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில், கருணை அடிப்படை யில் பணி நியமனம் கோரி விண்ணப்பிக்க எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், மணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோர உரிமையில்லை என்ற கருநாடகா அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.மேலும், மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *