திருச்சி, மார்ச் 12 திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு 3 நாட்களுக்குமுன் மீண்டும் திருச்சிக்கு வந்துள்ளார். அதிலிருந்து தொடர் காய்ச்சல், தலை வலியால் அவதிப்பட்டு வந்த அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துவிட்டார். அது கோவிட் தொற்றாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் பரிசோதனையில் அவர் கோவிட் தொற்றால் உயிரிழந்தார் என்பது உறுதியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் எச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் கடுமையாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது கோவிட் தொற்றுக்கான நடைமுறைகளும் செயல்பாட்டில் இல்லை. அதனால் மக்கள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.
இதனால் மக்கள் கூட்டமாக கலந்துகொண்டு வருகின்றனர். ஏற்கெனவே ஒன்றிய அரசு எச்3என்2 வைரஸ் அதிகமான பரவி வரும் நிலையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் ஏற்கெனவே இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மக்களும் ஆங்காங்கே தொடர் காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சோர்வு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா நடைமுறைகள் இல்லாததால் அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் உள்ளனர். மேலும் அதனுடன் கோவிட் தொற்றும் பரவி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.