ஆதிதிராவிட மாணவர்களுக்கு எம்பிஏ நுழைவுத் தேர்வு இலவசப் பயிற்சி

Viduthalai
1 Min Read

சென்னை,மார்ச்12- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எம்பிஏ நுழைவுத் தேர்வுக்கான (கேட்) இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன்படி, இந்திய மேலாண்மைக் கழகம் (அய்அய்எம்) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (அய்அய்டி) போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) மேற்படிப்பு பயில, நிகழாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்.

இப்பயிற்சியைப் பெற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும், கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

கல்லூரிகளில் இடம் கிடைத்தவுடன் எம்பிஏ பயில்வதற்கான ரூ.25 லட்சம் செலவினை தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்விக்கடனாக பெற்றுத் தரப்படும்.

இப்பயிற்சி காலத்தில் மாணவர்களுக்குத் தேவையான மடிக்கணினி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும்.

கூடுதல் விவரங்கள், விண்ணப்பப் பதிவுக்கு அதற்கான இணையதள முகவரியை அணுகலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *