சென்னை, ஜூலை 12– ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்ற விளையாட்டு வீரர்கள் உரிய ஆவணங்களை ஜூலை 20ஆம் தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ப.சிறீவெங்கடபிரியா 10.7.2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்று தங்கள் இணையதள விண்ணப்பத்தில் சிறந்த விளையாட்டு வீரர் என்று உரிமை கோரிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற விளையாட்டு சாதனை ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுகுறித்த தகவல் அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணை மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் அனைத்தையும் படிவம் ஒன்று முதல் 5 வரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக ஜூலை 11 (இன்று) முதல் 20ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திரிபுரா வெள்ளம்
11 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்!
அகர்தலா, ஜூலை 12- திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் 4,000 வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட உனகோடி மாவட்டத்தில் மட்டும் 6,068 பேர் 35 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தலாய் மற்றும் கோவாய் பகுதிகளில் மேலும் 4,909 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
