தென்காசி, ஜூன் 20- சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டு, பலருக்கு மறுவாழ்வு அளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், பனவடலி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்க லிங்கம் என்ற குமரன் (17). இவர் அண்மையில் நேரிட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் குமரன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் முறைப்படி அறிவித்தனர்.
உடல் உறுப்புகள் கொடை
தன் இளம் மகன் மீளா துயரத்திற்குச் சென்ற நிலையிலும், அவனது உடல் உறுப்புகள் மூலம் பிறர் வாழட்டும் என்ற உன்னத நோக்கில் குமரனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவனது உடல் உறுப்புகளைத் கொடையாக அளிக்க முன்வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவர் களின் தீவிர முயற்சியால் சிறுவனின் கல்லீரல் இரண்டு சிறுநீரகங்கள் கருவிழிகள் (கண்கள்) தோல் ஆகியவை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, தேவைப்படும் நபர்களுக்கு கொடையாக வழங்கப்பட்டன.
அரசு அதிகாரிகள் நேரில் மரியாதை
உடல் உறுப்பு கொடை செய்தவர் களின் உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, சிறுவன் குமரனின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கரன்கோவில் கோட்டாட்சியர் (RDO) அனிதா மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள் நேரில் வருகை தந்து, சிறுவனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து, அவனது உயரிய தியாகத்திற்குத் தலைவணங்கி அரசு மரியாதை செலுத்தினர்.
இளம் வயதில் உயிரிழந்த சிறுவனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப் பட்ட இச்சம்பவம், பனவடலிசத்திரம் மற்றும் தென்காசி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதே வேளையில் அவரது குடும்பத்தினரின் மனிதாபிமான முடிவிற்கான நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
