போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு ரூ.308 கோடி பணப்பயன் அளிப்பு
அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 28- அரசு போக்குவரத்துக் கழகங்களி லிருந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்களின் ரூ.308 கோடி மதிப்புள்ள பணப்பலன்களுக்கான காசோலைகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கி நடவடிக்கையைத் தொடங்கி வைத்தார். இதுகுறித்து நேற்று (27.3.2023) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு மே முதல் 2022 மார்ச் மாதம் வரை விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 2,867பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களாக ரூ.551.12 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, முதற்கட்டமாகக் கடந்தாண்டு டிச. 1ஆம் தேதியன்று இதில், 1,241 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடியை போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். தற்போது 1,626 பேருக்கு ரூ.308.45 கோடி பணப் பலன்கள் வழங்கப் படுகின்றன. நேற்று (மார்ச் 27) தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சா.சிவசங்கர், போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 23 விருப்ப ஓய்வு பெற்ற, இறந்தபணியாளர்களின் பணப் பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து மற்ற 1,603 பணியாளர்களுக்கும் அந்தந்தப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாகக் காசோலைகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில், போக்கு வரத்துத் துறை செயலர் கே.கோபால், அனைத்து போக்கு வரத்துக்கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.