தேசிய கல்விக் கொள்கை : 5-ஆம் வகுப்பு வரை 22 இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களாம்

Viduthalai
1 Min Read

 அகமதாபாத், மார்ச் 30- தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020-இல் தாய் மொழிகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படுவதையடுத்து, 5-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடக் குறிப்புகள், 22 இந்திய மொழிகளில் வழங்கப்படும் என ஒன்றிய கல்வித் துறை அமைச் சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஆனந்த் தேசிய பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் சார்பில் நடை பெற்ற 3 நாள் மாநாட்டை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதிய தேசிய கல்வித்திட்டத்தின்’கீழ் (என்சிஎஃப்) வடிவமைக்கப்பட்ட அடிப்படை வகுப்பு களுக்கான பாடக்குறிப்புகளின் ஆய்வுக் கூட்டம் கடந்த 27.3.2023 அன்று நடைபெற்றது. இதுவரை என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய 3 மொழிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழிக ளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 5-ஆம் வகுப்பு வரை யிலான பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடக் குறிப்புகளை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது. உலகின் முன்மாதிரியாகத் திகழும் எண்ம (டிஜிட்டல்) பல்கலைக்கழகத்தை அமைப்பதில் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

பள்ளிப் பாடப் புத்தகங்களைத் திருத்தியமைப்பதற்கான பணிகளை ஒன்றிய அரசு கடந்த 2020-இல் தொடங்கியது. இதற்கான தேசிய கல்வித் திட்டத்தை (என்சிஎஃப்) வகுப்ப தற்கான 12 உறுப்பினர்களைக் கொண்ட குழு இஸ்ரோ மேனாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *