குடும்பப் பெண்களும் தொழிலதிபர் ஆகலாம்!

Viduthalai
3 Min Read

அரசியல்

திறமை இருந்தால் குடும்பப் பெண்களும் தங்களுக்கு என்று ஒரு தொழில் அமைத்து அதில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வேலூரைச் சேர்ந்த ராஜிதான் எடுத்துக்காட்டு. இவர் பெரிய டிகிரி எல்லாம் படிக்கவில்லை. எட்டாம் வகுப்புதான் படித்துள்ளார். ஆனால் தனக்கு என்று ஒரு அடையாளம் வேண் டும் என்று நினைத்த ராஜி வீட்டில் இருந்தபடியே பொடி வகைகளை தயாரித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரின் பொடி வகைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரபல உணவகங்களுக்கும் விநியோகப்பட்டு வருகிறது. தன்னுடைய தொழில் வளர்ந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டார்.

சின்ன வயசில் உணவு குறித்து சிறிய அளவில் செய்ய வேண்டும் என்று விருப்பம் இருந்ததால் என் விருப்பத்தை என் கணவரிடம் சொன்னேன்.

2002இல் முதன் முதலில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு அரை கிலோ இட்லிப் பொடியை தயாரித்தேன். இதை என் கணவரின் துணையுடன் உணவகம் ஒன்றுக்கு கொடுத்தேன். அதன் சுவை வாடிக்கையாளர்களுக்கு பிடித்துப் போனதால், அந்த உணவகம் நிர்வாகி மீண்டும் என் கணவரை அணுகி பொடி வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்படித்தான் என் பொடி தொழில் உதயமானது. இட்லி பொடிதான் என் வாழ்வில் ஏற்பட்ட மிகவும் இனிமையான திருப்புமுனை என்று சொல்ல வேண்டும். ஆர்டர்கள் அதிகரிக்க என்னால் மட்டுமே தனித்து செயல்பட முடியவில்லை அதனால் இரண்டு பெண்களை வேலைக்கு நியமித்தேன்.

இட்லிப்பொடியினைத் தொடர்ந்து எள்ளுப் பொடி, சாதத்துடன் சாப்பிடக்கூடிய பருப்புபொடி, பூண்டுப் பொடி என நான்கு பொடிகளை தயாரித் தேன். அதனை நூறு கிராம், இருநூறு கிராம் பேக்கு களில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். ஒரு உணவகம் இரண்டானது, நான்கானது… இப்போது தமிழ்நாட்டின் பல ஊர்களில் உள்ள முக்கிய உணவகங்களுக்கு நாங்க தான் இந்த நான்கு பொடியினை கடந்த 20 ஆண்டுகளாக விநியோகம் செய்து வருகிறோம்.

எந்த தொழிலாக இருந்தாலும் புதிய அறிமுக தயாரிப்புகளுக்கு எளிதில் வரவேற்பு கிடைத்து விடாது. எங்களின் பொருட்களை மக்கள் மத்தியில் நிலைக்க செய்யவே ரொம்பவே கஷ்டப்பட்டிருக் றோம். ஆரம்பத்தில் எங்கள் பொடிகளிலும் குறை களை சுட்டிக் காட்டிய சில வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்களை நான் ஒதுக்கிடாமல், அவர் களையும் எங்களின் வாடிக்கையாளர்களாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து அதன் படி தயாரிப்பு முறையில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்தேன். அந்த சுவை அவர்களுக்கு பிடித்து விட,வே வேண்டாம் என்று ஒதுக்கியவர்களும் கூட இப்போது எங்களின் வாடிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள்.

என் கணவர் மற்றும் என் மகன் இருவருமே எனது தயாரிப்பு பொருட்களின் தரம் நிலைக்க, விற்பனை அதிகரிக்க உதவி வருகிறார்கள். மேலும் என்னிடம் வேலை பார்ப்பவர்கள். இவர்கள் இல்லை என்றால் என்னால் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை தயாரித்து கொடுத்திருக்க முடியாது. என்னுடைய எல்லாக் காலங்களிலும்  எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். 

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதனை பெரிய நிறுவனங்களுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்றில்லை. சாதாரண மக்களுக்கும் நம்முடைய பொருள்கள் சென்றடைய வேண்டும். அந்த எண்ணத்தில் தான் நாம் தொழிலினை துவங்க வேண்டும். ஆரம்பத்தில் சில இழப்புகளை கண்டு துவண்டு விடாமல், தொடர்ந்து முயற்சித்தால் கண்டிப்பாக லாபம் பார்க்க முடியும். என்னைப் போல் வேலைக்கு போகாத குடும்பப் பெண்கள் அவர்களின் திறமைக்கு ஏற்ற சுயதொழில்களை தயங்காமல் நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் ஈட்டலாம். 

இவ்வாறு மகிழ்வுடன் அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *