விராலிமலை, ஏப்.12 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (10.4.2026) தஞ்சாவூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர், புதுக்கோட்டைக்கு சென்று இரவு தங்கினார். நேற்று (11.4.2026) காலை விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பெரிய கடைவீதி, சின்னகடை வீதி, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, இலுப்பூர் பேருந்து நிலையம், கோட்டை தெரு வரை சுமார் 40 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, விராலிமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதிகளில் கூடியிருந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு கை கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதலமைச்சருடன் சுய நிழற்படமும் எடுத்துக்கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இலுப்பூர் கோட்டை தெருவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி சென்றபோது அங்கு சாலையோரத்தில் இருந்த ஒரு தேநீர்கடையில் தேநீர் குடித்தார்.
அப்போது கடை உரிமையாளரை அழைத்து அருகில் உட்கார வைத்து வியாபாரம் எப்படி நடக்கிறது என கேட்டு தோளை தட்டிக்கொடுத்தார். முதலமைச்சருடன் வேட்பாளர்கள் ரகுபதி, மெய்யநாதன், செல்லபாண்டியன், முத்துராஜா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரும் தேநீர் குடித்தனர். பின்னர், மணப்பாறையிலிருந்து இலுப்பூர் கடைவீதிக்கு வந்த தனியார் பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் உள்ளார். அதனால் விரக்தியில் நிதி மேலாண்மையை கையாள தெரியவில்லை என்று குறைகூறி பேசி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தோம். இன்று (நேற்று) காலை இந்த தொகுதியில் மக்களின் எழுச்சியை பார்த்ததில் இருந்து 234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி. பாஜ தலைவர்கள் எத்தனை பேர் படையெடுத்து வந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது.
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி உள்ளனர். இது போன்று என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இதற்கு மேலும் பண்ணுவார்கள். அதை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுகவை டில்லியில் அடமானம் வைத்து விட்டனர், குத்தகைக்கு விட்டு விட்டனர், அடிமையாகி விட்டனர். அதனால் அவர்களை டில்லி தான் ஆட்சி செய்கிறது. அதிமுக என்ற திராவிட கட்சி இப்படி போனதற்காக வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அவர்களே திருந்துவார்கள்
நடிகர் விஜய்யை பின்தொடர்ந்து சென்று இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனரே என்ற கேள்விக்கு, ‘‘நடிகர் உள்ளிட்ட யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். நடிகர் பின்னாடி சென்று விபத்துக்கள் நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். அவர்களே திருந்துவார்கள்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

