தமிழர் தலைவரின் பரப்புரைக் கூட்டத்தில் கண்டதும் கேட்டதும் – 4

Viduthalai
7 Min Read

காரைக்காலில் ஆசிரியருக்கு ‘எடைக்கு எடை’ பழங்கள் வழங்கப்பட்டன!

வாழையடி வாழையாக தொடரும் கொள்கைச் சொந்தம்!

அரசியல்

“நான் மயிரைக் கட்டி, மலையை இழுக்கிறேன்! வந்தால் மலை, போனால் மயிர்!” என்று தந்தை பெரியார் குறிப்பிடுவது எதைச் சுட்டுகிறது? புரையோடிப் போயிருக்கும் இந்த வைதீக மத அடிமைத்தனத்தைத்தான்? வர்ண தர்ம கோட்பாட்டைத் தான்? இதையே வேறொரு இடத்தில், ”மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்! ஆனால், மானங்கெட்ட ஒருவருடன் போராடுவது கடினம்” என்கிறார். 

அதே வைதீக மவுடீகத்தைத்தான் வேறு வழியில் சுட்டிக் காட்டுகிறார்! அது சரி,  இவ்வளவு கடினமான பணியை எதற்காக  பெரியார் செய்ய வேண்டும்? அதுவும் வாழ் நாளெல்லாம் இதே பணியை அலுப்பு, சலிப்பின்றி, ஏன் செய்ய வேண்டும்? அவர் மனிதர்களை நேசித்தார்! அதனால் தான் வைதீகத்திற்கு எதிராக போராடினார்! அவ்வளவுதான்! அந்த மனிதநேயம் தான் அவரை தானாக தெருவில் இறங்கி, போராட வைத்தது!  அந்த பணியில் எவ்விதமான இடையூறு வந்தாலும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியது. 

அரசியல்

விடாமுயற்சியாக ஒற்றை நபராக துணிந்து இறங்கி போராடி, ஓர் அமைப்பை உருவாக்கி, உலகமே வியக்கக் கூடிய, ஒப்பு உவமை இல்லாத இந்தத் தொண்டைத்தான், பெரியார் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக செய்து, அசைக் கவே முடியாது என்றிருந்த அந்த ’வைதீக மத’ மலையை அசைத்தே விட்டார். அதற்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் அறிவு! வெறும் அறிவல்ல, பகுத்தறிவு! இது தமிழ்நாட்டிற்கு மட்டுமே உள்ள ஒரு தனித்துவமான வரலாறு! இதன் எதிரொலியாக அவரால் மானமும், அறிவும் பெற்று, அதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்புகள் பெற்று பார்ப்பனர்களுக்கு சமமாக உயர்ந்து. 

முதுகு நிமிர வாழ்கின்ற தொண்டர்கள், அதற்குக் காரண மானவருக்கு என்ன கைமாறு செய்வது? என்று தெரியாமல் தத்தளித்தார்கள். காரணம், பெரியாரே, “என்னுடைய தொண்டு நன்றி பாராத தொண்டு” என்று சொல்லிவிட்டார்! அப்படியென்றால் தங்களின் நன்றியை எப்படித்தான் காட்டுவது? இப்போது சொல்லுங்கள், பெரியார் செய்த தொண்டுக்கு எப்படி கைம்மாறு செய்வது? முடியுமா? முதலில் அவருடைய தொண்டை எப்படி எடை போடுவது? என்ன அளவுகோலை பின்பற்றுவது? இதற்கெல்லாம் கணக்குப் போட முடியுமா? பிறகுதானே எடை போடுவதைப் பற்றி கணக்கிடுவதற்கு? அப்படிக் கணக்குப் பார்த்து தீர்த்துவிடக் கூடியதா பெரியாரின் தொண்டு? பெரியாரின் தொண்டிற்கு கைம்மாறு செய்வதற்கு வேறு என்னதான் வழி? அதற்குத்தான் பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்ட தொண்டர்கள், அவரவர்கள் சக்திக்கு ஏற்ப, அவரது எடைக்கு எடை பொருட்களை வழங்கி, நாமும் பெரியாருக்கு ஏதோ ஒரு வகையில் நன்றிக்கடன் தீர்த்து விட்டோம் என்று மகிழ்ந் திருக்கிறார்கள்!

மயிர்க்கூச்செரிய வைத்த 

கொள்கைப் பற்று!

இந்த தனித்துவமிக்க வரலாறு, பெரியாருக்கு பின்பும் தொடர்கிறது! அந்தப் பெருமையைப் பெற்றிருப்பவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான்! அந்த வரலாற்றின் தொடர்ச்சி கடந்த மாதம் கூட, 29-03-2023 அன்று காரைக்காலிலும் நிகழ்ந்தது. ஆசிரியர், ”இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தால் தோழர்கள் சங்கடப்பட கூடுமென்று நாங்கள் எண்ணியிருக்கையில், கூட்டத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்த தோடதல்லாமல், இதையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்” என்று தனது வியப்பை மேடையிலேயே வெளிப்படுத்தினார். அந்த நிகழ்ச்சி, ’சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம்’ பரப்புரை சுற்றுப்பயணத்தின் 54 ஆம் பொதுக் கூட்டம்! கொடுத்த பொருட்கள், ‘பழங்கள்! மண்டலச் செயலாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி கழகத் தலைவரின் எடைக்கு எடை பழங்களை வழங்குவதாக அறிவித்து, பலத்த கைதட்டல்களுக்கிடையே கழகத் தலைவரை எடைத் தட்டில் அமர வைத்தார். தனக்கு வழங்கப்பட்ட மரியாதையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ஆசிரியர், ”நான் எதையும் எனக்கென்று வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. ஆகவே, வழங்கிய பழங்களை ஏலத்தில் விடுகிறேன்” என்று அங்கேயே ஆசிரியர் அறிவித்தார். இதுவும் புதிதில்லை! பெரியார் காலத்தில் நடந்த ஒன்றுதான்! பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ரூ. 10,000/- க்கு ஏலம் அறிவித்தார். கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் லூயிஸ் பியர் ரூ 20,000/- த்திற்கு எடுத்தார். ஆசிரியர் அவர்கள், ”இந்த நிதியை திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உல கத்திற்கு வழங்குகிறேன்” என்று பலத்த கைதட்டல்களுக் கிடையே அறிவித்துவிட்டு, பேசத்தொடங்கினார். கூட்டம் முடிவதற்குள் ஏலம் எடுத்த தோழர் லூயிஸ் தொகையை ஆசிரியரிடம் பெருமகிழ்வுடன் கொடுத்தார். அப்பப்பா… அப்போது ஏற்பட்ட உணர்ச்சி மயிர்க்கூச்செரிய வைத்தது! 

ஆசிரியருக்கு, நாணயங்கள், பெட்ரோல், நெல் வழங்கிய  தோழர்கள்!

ஆசிரியருக்கு,  ஏராளமான பொருட்கள் தோழர்களால் வழங்கப்பட்டுள்ளன என்றாலும், குறிப்பாக எடைக்கு எடை யாக வழங்கப்பட்டது ஒன்றா? இரண்டா? பட்டியலிட்டால் நீ…ளும். 30-06-1979 இல் தென்னார்க்காடு மாவட்டத்தின் சார்பில், ஆசிரியரின் எடைக்கு எடை நாணயம் வழங்கப் பட்டது! நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று, 11-05-1980 இல் கோவையில் எடைக்கு எடை பெட்ரோல் (100 லி) வழங்கினர்! அவர் பிறந்த கடலூரில் 22-11-1981 இல், இரு மடங்கும், 28-11-1981 இல் தஞ்சை நகரத்தின் சார்பிலும், 3-4-1982 இல், மாயூரம் வட்டத்தின் சார்பிலும், லால்குடியில், மும்மடங்கும், 25-.4-1982 இல், வட ஆற்காடு மாவட்டக் கழகத்தின் சார்பில் மும்மடங்காக ஒரு ரூபாய் நாணயங்களும் எடைக்கு எடையாக வழங்கப்பட்டன! 17-7-1982 இல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய 15 அமைப்புகள் சேர்ந்து, ஆசிரியருக்கு எடைக்கு எடை பல்வேறு பொருட்களை வழங்கினர்!  

2-5-1986இல், சென்னை மடிப்பாக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக, 53 வயதை குறிக்கும் வகையில் 53 வகையான பொருட்களும் எடைக்கு எடை தரப்பட்டன! 24-4-1987 இல், தென் சென்னை மாவட்டத்தின் சார்பில் சைதை தேரடியில் எடைக்கு எடை  நாணயங்கள்  வழங்கப்பட்டது. இதில், தனக்கு வழங்கியதை ஆசிரியர், விடுதலைப் புலிகளுக்கு அளித்தார். 21-9-1991 இல், வடலூரில், சென்னை ராயப்பேட் டையில் தென்சென்னை கழக இளைஞரணி சார்பில் எடைக்கு எடை நாணயங்கள் வழங்கப்பட்டன! 9-5-1992 இல், திருச்சியில் பெண்கள் விடுதலை மாநாட்டில் எடைக்கு எடை ரூபாய் வழங்கப்பட்டது! 15-5-1992 இல், காவிரி பட்டினத்தில் எடைக்கு எடை மாங்கனிகள் வழங்கப்பட்டன! 8-4-1993இல், பட்டுக்கோட்டையிலும், 15-5-1994 இல், புள்ளம்பாடி ஒன்றியம் விடுதலை புரத்திலும், 7-8-1994 இல், ஜெயங்கொண்டத்திலும் எடைக்கு எடையாக நாணயங்கள் வழங்கப்பட்டன! 

10-8-1996 இல், புதுக்கோட்டையில் கழக இளைஞரணி மாநாட்டில் எடைக்கு எடை வெள்ளி வழங்கப்பட்டது! 

1-2-1998 அன்று எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டது! 20-3-2001 அன்று மதுரையிலும், 20-3-2002 அன்று வில்லிவாக் கத்திலும், 29-6-2002 அன்று தாராபுரத்திலும், 16-3-2003 இல், ஆத்தூரிலும், 11-12-2003 இல், சத்துவாச்சாரியிலும், கள்ளக் குறிச்சியிலும் எடைக்கு எடையும் நாணயங்கள் வழங்கப் பட்டன! 70 வயதைக் குறிக்கும் வகையில் 70 மூட்டை நெல்லும், எடைக்கு எடை நாணயங்களும் வழங்கப்பட்டன! 12-4-2007 இல், போடி வர்த்தகர் சங்கம் சார்பில், எடைக்கு எடை திராட்சைப் பழம், தேங்காய் போன்றவை வழங்கப் பட்டன! 27-9-2010 இல், சீர்காழியில் எடைக்கு எடை நாணயங்கள் வழங்கப்பட்டன! 8-10-2010 இல், திருவரங்கத்தில் வகை வகையான பொருட்கள் எடைக்கு எடை வழங்கப் பட்டன! 30-1-2011 இல், உரத்த நாட்டில் எடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன! 19-02-2022 இல், சென்னையில் எடைக்கு எடை நாணயங்களும், 14-8-2022 இல், திருப்பத் தூரில் எடைக்கு எடை ரூபாய் நோட்டுகளும் வழங்கப்பட்டன! அதன் பிறகுதான் முந்தைய பத்தியில் நாம் பார்த்த பார்த்த ’காரைக்கால்’ ஆகும்!

எப்படிப்பட்ட தலைவர்! 

எப்படிப்பட்ட தொண்டர்கள்!

ஒவ்வொரு முறை கொடுக்கப்படும் பரிசுகளுக்கும் ஒவ்வொரு பின்னணியும், வரலாறும் உண்டு! அதில் கடைசியாக காரைக்காலில், ’எடைக்கு எடை’ பழங்கள் கொடுக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம், கேட்டோரை, கண்டோரை கண் கலங்க வைத்துவிட்டது. கடந்த 6-3-2023 அன்று திருமருகல், காரைக்காலில் ஆசிரியர் கலந்து கொள்ளவிருந்த பொதுக்கூட்டம், அவருக்கு உடல்நிலை தொய்வு ஏற்பட்டதால், ஆசிரியரின் பாதுகாப்புக் கருதி, உடனடியாக சென்னை திரும்புமாறு மருத்துவர் வலியுறுத்த, நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, சென்னை திரும்பி விட்டார். அதன்பிறகு 29-3-2023 அன்றுதான் காரைக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆசிரியருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே’ என்று தோழர்கள் கவலைப்பட்டனர். அந்தக் கவலையைத் தான் 29-3-2023 அன்று காரைக்காலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மண்டலச் செயலாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி குரல் தடுமாற வெளிப்படுத்தினார். அதாவது, “ஆசிரியருக்கு உடல் நிலைக்குறைவு என்றதும், எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாம் ஏதாவது செய்ய வேண்டுமே என்று தவிப்புடன் இருந்தேன். அதற்காகத்தான் ஆசிரியரின் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடிய ஆப்பிள் போன்ற பழங்களை, அவரின் எடைக்கு எடை வழங்கலாம் என்று வழங்கினேன்” என்றார். ஆசிரியர் உள்பட அனைவருமே நெகிழ்ந்து போயினர். எப்படிப்பட்ட தொண்டர்கள்? இப்படிப்பட்ட தொண்டர்களை வார்த்தெடுத்துள்ள இந்தத் தலைவர்தான் எப்படிப்பட்டவர்? வாழையடி வாழையாக தொடரும் இந்தக் கொள்கைச் சொந்தம் இருக்கும் வரையில், இந்த எடைக்கு எடை கொள்கைக் கலாச்சாரமும் தொடரும்! இதைப்பார்த்து ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., அதன் பரிவாரங்கள் வயிறெரிய வேண்டியதுதான். இன்னுமொன்று, இந்த கலாச்சாரம் தொடருகிற வரையிலும்,  ஆசிரியரே சொல்வது போல், ”எந்தக் கொம்பனாலும் திராவிடர் இயக்கத்தை அசைத்துவிட முடியாது!”

– உடுமலை வடிவேல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *