முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! சி.பி.எம். தேர்தல் அறிக்கை

2 Min Read

சென்னை, ஏப்.8- முதல் தலைமுறை பட்டதாரி களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட 71 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (6.4.2026) வெளியிட்டார். “மதச்சார்பின்மை – மாநில உரிமைகளைப் பாதுகாப்போம்; உழைக்கும் மக்கள் குரலை உரத்து முழங்குவோம்” என்ற முழக்கத்துடன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மாநில சுயாட்சி, தொழிலாளர் நலன் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் காலக்கெடு நிர்ணயித்தல், பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குதல் மற்றும் அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நன்கொடை பெறுவதைத் தடை செய்தல் போன்ற அதிரடி மாற்றங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. தென்மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்கும் தொகுதி மறுவரையறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம், 100 நாள் வேலைத் திட்டக் கூலியை ரூ.700 ஆக உயர்த்தி 200 நாட்களாக விரிவாக்குதல் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் போன்றவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதல் விலை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தவும், கோயில் மற்றும் வக்பு நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாது மணல், கல் மற்றும் கிரானைட் குவாரிகளை அரசாங்கமே ஏற்று நடத்துதல், கேரளாவைப் போல ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ கொண்டு வருதல், அனைத்துத் துறைகளிலும் தமிழை முழுமையான ஆட்சி மொழியாக்குதல் மற்றும் ஹிந்தி திணிப்பை எதிர்த்தல் போன்றவை மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம்பிடித்துள்ளன.

மேலும், சத்துணவு திட்டத்தில் அசைவ உணவுகள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை மற்றும் புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் உள்ளிட்ட 71 வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *