சமுதாய இலக்கணம்
ஒரு கருத்து சிறந்தது: எப்போது தெரியுமா? எவரும் தம் வாழ்வில் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் தான். ஒரு தலைவர் சிறந்தவர்; எப்போது தெரியுமா? அவர் எவராலும் பின்பற்றப்படாதவராக இருப்பதால்தான். திருக்குறள் சிறந்த நூல்-எவரும் குறட்கருத்துக்களை வாழ்வில் ஏற்று நடக்கவில்லை. பெரியார் சிறந்த தலைவர்-எவரும் அவர் கொள்கையைப் பின்பற்றி வாழவில்லை. இதுதான் சமுதாய இலக்கணம். பெரியாருக்கு வாய்த்த இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஏற்கப்படாமையை விட மிகமிக எதிர்க்கப்பட்டவர் பெரியார். வாழ்ந்த காலத்திலும், தன் வாழ்நாளுக்குப் பின்னும் பெரியாரைப் போல் எதிர்க்கப்பட்டவர் எவருமில்லை. இன்றும் அவருக்குக் கிடைத்திருக்கும் பெரும் எதிர்ப்பு என்ன தெரியுமா? யாரைக் கைதூக்கி விட பெரியார் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அவர்களே பெரியாரை எதிர்ப்பதுதான்.
தடுமாறும் சமுதாயம்
“பெரியாரைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலும் மதிப்பிட முடியாமலும் அன்றும் இன்றும் இந்தச் சமுதாயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது,”
என்பது நேர்மை மிக்க ஆய்வாளர்கள் பலரின் ஒருமித்த கருத்தாகும்.
‘பெரியார் குறித்த ஆய்வைத் தொடங்கு முன்னரே தமிழ்நாட்டில் முடித்து விட்டார்களே என அஞ்சும் நிலை இன்று உள்ளது’ எனச் சொல்லும் பேராசிரியர் ஒருவரின் மதிப்பீடு மிகமிகப் பொருத்தமாகவே உள்ளது.
எத்தனை எத்தனை எதிர்ப்புகள்:
பெரியார் தமிழ்ப் பகைவர்.
பெரியார் கடவுள் மறுப்பாளர் நாத்திகர்.
பெரியார் பிரிவினையாளர்.
பெரியார் பெண்ணை இழிவுபடுத்தியவர்.
எனப் பெரியார் எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்க்கப்பட்டார். எல்லாக் கோணங்களிலிருந்தும் எதிர்க்கப்பட்டார். அத்துணை எதிர்ப்பையும் பெரியார் எதிர்த்துச் சிதைத்துத் தன்னை நிலை நாட்டினார்… என்பதை அவர் வார்த்தைகளாலும் அவர் வாழ்க்கையாலுமே இங்கே நிறுவ முயற்சிப்போம்.
“ஒரு சிந்தனையாளர் கருத்துகளை அவர் எதிரிகளை விடச் சீடர்கள் சிதைத்து விடுகின்ற கொடுமை, வரலாறு நெடுகக் காணப்படுகிறது. புத்தர், காந்தி,பெரியார் மூவரும் இவ்வாறே தோற்கடிக்கப்பட்டவர்கள்; மறுக்கப்பட்டவர்கள்; மறைக்கப்பட்டவர்கள்.”
என்பார் தோழர் அருணன். பெரியாரைச் சீடர்களும் சிதைத்தார்கள். எதிரிகளும் சிதைத்தார்கள். அந்தச் சிதைவிலிருந்து மீட்டுப் பெரியாரின் உண்மை நோக்கை, முழுமைப் பொருண்மையை இங்கே காண்போம்.
