புதுச்சேரி, ஏப்.7- புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் ரங்கசாமியிடம், இலவச மனைப் பட்டா மற்றும் அரசு வேலைவாய்ப்பு குறித்துப் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘கேள்வி கேட்பது சுலபம், ஆனால் அவற்றைச் செய்து முடிப்பது கடினம்’ எனக் கூறியதோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்துக் குறைகளும் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரவிக்குமாருக்கு ஜக்கு சின்னத்தில் வாக்கு சேகரிக்க முதலமைச்சர் ரங்கசாமி நேற்று (6.4.2026) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
முத்துப்பிள்ளை பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்த முதலமைச்சரிடம் அந்த பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக இலவசமனைப் பட்டா வழங்கப்படவில்லை படித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவில்லை வேலைவாய்ப்பு வழங்கியவர்களுக்கு அரசாணை வழங்கப்படவில்லை, இதையெல்லாம் எப்போது வழங்குவீர்கள் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ரந்தசாமி எத்தனை ஆண்டு காலமாக இலவச மனை பட்டா இல்லை என்ற விவரத்தை தெரிவித்தால் அடுத்த ஆட்சி அமைந்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
பொதுப்பணித்துறையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்ததும் தனது அரசுதான், ஊதிய உயர்வு கொடுத்ததும் தனது அரசு தான். எனவே கேள்வி கேட்பது சுலபம் அதனை செய்து முடிப்பது தான் கடினம்.
எனவே கூட்டணி ஆட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது உங்களுடைய குறைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பொதுமக்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பல்வேறு குறைகளை சுட்டி கட்டி கேள்வி எழுப்பி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

